போலி டெண்டர்! ரூ2.2 கோடிகளை லபக் செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

போலி டெண்டர்! ரூ2.2 கோடிகளை லபக் செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!

ம.பா.கெஜராஜ்,

  சென்னை மாநகராட்சி டெண்டர் விவகாரத்தில் பலகோடி தில்லாலங்கடி நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில சாலைப் பணிகளை முடித்துவிட்டு, அதற்கான டெண்டரை இப்போது விட்டுள்ளனர். அந்த வகையில்  ராயபுரம் மண்டலத்தில் லாங்க்ஸ் கார்டன் சாலை,ராஜாஜி சாலை, ராஜ முத்தையா சாலை போன்ற சாலைகளில் ஏற்கனவே பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், கடந்த வாரம் இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது.

  இது குறித்து சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் ஊடகவியலாளர்கள் விசாரித்தபோது, பணிகள் முடிந்துவிட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த டெண்டர் முறைகேடாக விடப்பட்டிருப்பதையும் உறுதி செய்தனர். ஏற்கனவே முடிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவே இந்த டெண்டர் நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  டெண்டரில் பங்கேற்ற சிலர் இது குறித்து கூறுகையில், "டெண்டரில் இருந்து விலகும்படி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர்" என்றனர். புதிய டெண்டர் முறைப்படி, அனைத்து டெண்டர்களையும் tn tntenders இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் டெண்டரில் பங்கேற்கலாம். ஆனால், இந்த விஷயத்தில், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் டெண்டர் அழைப்பு விடுத்துள்ளனர்.

   இது குறித்து டெண்டரில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே முடிந்த வேலைக்கு டெண்டர் விடுவதை அறிந்து நாங்கள் விண்ணப்பித்தோம். ஆனால், அதிகாரிகள் எங்களை விலகும்படி வற்புறுத்தினார்கள்" என்றார். மற்றொரு ஒப்பந்ததாரர் கூறுகையில், "இது ஒரு போலி டெண்டர். ஏற்கனவே வேலையை முடித்த ஒப்பந்ததாரர், தனக்கு தெரிந்த இரண்டு நபர்களை வைத்து குறைந்த விலைக்கு டெண்டர் எடுக்கிறார்" என்றார்.

   விதிகள்படி அவசர வேலைகளுக்கு மட்டும் 50,000 ரூபாய்க்கு குறைவான டெண்டர்களை சென்னை மாநகராட்சி விடலாம். ஆனால், இந்த டெண்டர்கள் ஒவ்வொன்றும் 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையவை. இது குறித்து ஆணையர் ஜெ. குமாரகுருபரன் மற்றும் மேயர் ஆர். பிரியா ஆகியோர் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனராம்.

  இந்த முறைகேட்டில், அதிகாரிகள் சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.