5 - உத்தரவாதங்கள் உடனே அமுல்:-ராகுல் காந்தி - மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை:-மு.க.ஸ்டாலின்!

ஜி.சாந்தகுமார்,
5 - உத்தரவாதங்கள் உடனே அமுல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கும் நிலையில் - மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை இது என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் பதவி ஏற்பு சிழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:- எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்றுபேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர்
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் தங்களது திறமையான நிர்வாகத்தின் மூலம் கர்நாடக மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன். தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த விடியல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூருவில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா" என்று கூறியுள்ளார்.