என்னது பா.ம.க.வினர்... வி.சி.க. வுடன் இணைந்து போராட்டமா?

என்னது பா.ம.க.வினர்... வி.சி.க. வுடன் இணைந்து போராட்டமா?

   பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

   எதற்கெடுத்தாலும் வெட்டு குத்து என மோதிக்கொள்ளும் பா.ம.க.வினரும், வி.சி.க.வினரும் இணைந்து போராட்டம் நடத்திய விவகாரம் தான் தற்போது ஆச்சர்யமாக பேசப்படுகிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

  தண்டரை ஊராட்சி....... இது செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ நிறுவனம் சார்பில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 44 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

  அதற்கு ஏதுவாக வருவாய்த் துறையிடமிருந்து சிட்கோ நிறுவனத்துக்கு நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. சுறுசுறுப்பாக துவங்கிய இந்த பணிகள் பின்னர் ஆமை வேகத்துக்கு தள்ளப்பட்டது.

  அப்படியிருக்க அருகிலுள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதி புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை எடுத்து, சிட்கோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள பள்ளமான பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் துவங்கின.

  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மண் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மீண்டும் பொக்லைன் இயந்திரத்துடன் மண் அள்ளும் பணிகள் நடந்துள்ளன. இதனையறிந்து தண்டரை ஊராட்சி மன்றத் தலைவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயலட்சுமி அறிவழகன் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் அங்கு கூடிவிட்டனர்.

   மண் அள்ளுவதை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடியுடன் திரளாக அணிவகுத்தனர்.

 ஏற்கனவே வி.சி.க,வினர் கொடிகளுடன் அங்கு இருந்த நிலையில் பா.ம.க கொடிகள் அங்குஇணைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.     பதறியடித்த தாசில்தார் ராஜன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 பின்னர்,மலைப் பகுதியில் சிட்கோ நிறுவனம் மண் எடுப்பதை ரத்து செய்யுமாறு தண்டரை ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 அந்தத் தீர்மானத்தில், ``திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நில புல எண்: 182/2, 183/ஏ, 183 பி/2, 183 பி/4 உள்ள இடங்களில் உள்ள மலைப் பகுதியை சிட்கோ நிறுவனமானது, மலையையும் மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள், மயில், மான்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படுத்தப்படுகிறது.

  நிலத்தடி நீர், மின் கம்பங்கள், சாலைகள், மண் சரிவுகள் ஏற்படக் கூடிய சூழல் உள்ளது. எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் எடுத்து வருவதை உடனே ரத்து செய்ய வேண்டும்' என தீர்மானத்தில் பதிவிட்டுள்ளனர்.

 வி.சி.க நடத்திய போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்பா என்று வியந்தவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெலட்சுமி கீழ்கண்டவாறு பதிலலித்து அசத்தியுள்ளார்.

  அதில் `` சிட்கோ நிறுவனம் தொழிற்பேட்டை அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் பள்ளத்தை நிரப்புகிறோம் என்ற பெயரில் மலையில் உள்ள மண்ணைத் தோண்டி எடுப்பதை ஏற்க இயலாது.

  `மண் மேடான பகுதியில் மட்டுமே மண் அள்ளுவதற்கு கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். ஆனால், விதிகளை மீறி 300 லாரிகள் வரையில் மண்ணை அள்ளிவிட்டனர். இதனை எதிர்த்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்"

  நாங்கள் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறோம். இங்கு வன்னியர்களும் தலித் மக்களும் நிரம்பியுள்ளனர். இங்கு 560 வன்னியர் வாக்குகள் உள்ளது என்றால் அதில் 500 வாக்குகள் எங்களுக்கு விழுந்தன. அவர்களை அரவணைத்துச் செல்வது தானே நியாயம்.

  எங்களிடம் அதிகப்படியான வார்டு உறுப்பினர்கள் இருந்ததால் பா.ம.கவுக்குத் துணைத் தலைவர் பதவியை வழங்கினோம்.

 

தண்டரை மலையை மீட்கும் போராட்டத்தில் இரு தரப்பிலும் ஒற்றுமையாக உள்ளோம்.

 அந்த ஒறுமைதான் மலையைக் காப்பாற்ற முடிந்தது" என்று கூறியுள்ளார் பெருமையாக.