அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஹூதி கிளர்ச்சிக்குழு படகுகள்!

ம.பா.கெஜராஜ்,
"லைவ் லுக்" சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற முயன்ற ஹூதி குழுவின் சிறு படகுகளை தாக்கி அழித்துள்ளது அமெரிக்க கடற்படை.
ஏமனில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நான்கு படகுகள் மார்ஸ்க் ஹாங்சோ என்ற சரக்கு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அதை கைப்பற்ற அருகில் வந்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அருகிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலின் ஹெலிகாப்டர்களுக்கு இதுகுறித்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பேரில் ஹூதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க கடற்படை "தற்காப்புக்காக" மூன்று படகுகளை முழ்கடித்துள்ளது.
இதில் அந்த படகுகளில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். நான்காவதாக வந்த படகு தப்பித்து விட்டது.
முக்கியமான கடல்பாதையான செங்கடல் பகுதியில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது நவம்பர் மாதத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டிரோன் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது ஹூதி குழு.
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள வணிகக் கப்பலான, மார்ஸ்க் ஹாங்சோ சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேனிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும்.
இரான் ஆதரவு பெற்ற ஏமன் கிளர்ச்சி குழுவான ஹூதிக்கள் காஸா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை சேர்ந்த கப்பல்களை மட்டுமே தாக்குவதாக அறிவித்திருந்தது.
ஆனால் அதையும் கடந்து பல நாட்டு சரக்கு கப்பல்களை ஹூதி குழு தாக்கிவருவதாலேயே அமெரிக்க குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.