பெண் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த திமுக செயற்குழு உறுப்பினர்! சிசிடிவி காட்சிகளை மறைத்து விசுவாசம் காட்டிய டி.எஸ்.பி. குணசேகரன்!

பெண் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த திமுக செயற்குழு உறுப்பினர்! சிசிடிவி காட்சிகளை மறைத்து விசுவாசம் காட்டிய டி.எஸ்.பி. குணசேகரன்!

உ.சசிகுமார்,

"லைவ் லுக்" சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கடந்த டிச-27 ஆம் தேதி காவல் துறை பெண் இன்ஸ்பெக்டரை திமுக பிரமுகர் கன்னத்தில் பளார் என்று அறைந்திருக்கிறார். அதன் பேரில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவது துணைவியார் சிவசங்கரி மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அண்ணாமலையார் கோவிலில் கடந்த 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்தின் போது உண்ணாமுலை அம்மன் சன்னதியில் தேசூர் பெண் காவல் ஆய்வாளர் காந்திமதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 அப்போது தரிசனத்திற்காக அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தத்தின் தம்பியும், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் திருவண்ணாமலை நகர மன்ற தலைவருமான ஸ்ரீதரன் தன் துணைவி சிவசங்கரியுடன் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

  அப்போது வரிசையில் வந்த பக்தர்களுக்கு சாமி தரிசனம் சரியாக கிடைக்கவில்லை. இதனால் ஸ்ரீதரன் குடும்பத்தாரை ஓரு பக்கமாக நின்று சாமி கும்பிடுங்கள் என பெண் காவல் ஆய்வாளர் காந்திமதி கூறினாராம். இதனால் திமுக பிரமுகரின் மனைவி சிவசங்கரி பெண் காவல் ஆய்வாளரை முறைத்து பார்த்துள்ளார்.

  அப்போது ஏன் முறைக்கிறீர்கள் உங்களைப் போல் தான் அனைவரும் சாமி பார்க்க பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நீங்கள் உள்ளே நின்று கொண்டு பக்தர்களுக்கு சாமி தெரியாத அளவிற்கு மறைத்து நிற்கிறீர்கள் என பெண் ஆய்வாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் பெண் காவல் ஆய்வாளர் காந்திமதி கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவல் ஆய்வாளர் இது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் தொலைபேசி வாயிலாக புகார் கூறியுள்ளார். அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீங்கள் அங்கு இருக்க வேண்டாம் கிளம்பி வந்து விடுங்கள் என கூறினாராம்.

 அது மட்டுமில்லாமல் உங்களுடைய போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மருத்துவ விடுப்பில் சென்று விடுங்கள் எனக் கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக பேசாமல் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் தரப்பில் கூறப்படுகிறது.

  மேலும் இது தொடர்பாக அண்ணாமலையார் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிகளை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் பறிமுதல் செய்து அதனை வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொண்டு தாம் சார்ந்த காவல் துறை இன்ஸ்பெக்டருக்கு துரோகம் இழைத்திருக்கிறார். (விசுவாசம்)

  இந்த சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜீவாலின் கவனத்திற்கு சென்றதும் அது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக திமுக மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர் மன்ற சேர்மேனுமான ஸ்ரீதரன் மற்றும் அவரது துணைவி சிவசங்கரி மற்றும் கோயில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையினைக்கூட இணையத்தில் பதிவு செய்யவில்லையாம். இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த ஸ்ரீதரன் திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவராவர். அவர் ஏற்கனவே பல்வேறு சத்திரங்களுக்கு சொந்தமான இடத்தை ஆட்டையை போட்டவராம்.

 திமுகவினர் கொஞ்சம் சத்தமாக தும்பினால் கூட அராஜகம் செய்கிறார்கள் என்று சவுண்டு விடும் பாஜக தற்போது இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் உள்ளதாம். ஏன்னா இன்ஸ்பெக்டரை ஸ்ரீதரன் அறைய காரணமாக இருந்த அவரது துணைவியார் சிவசங்கரியின் சகோதரர் பாலு என்பவர் பாஜகவின் மாவட்ட தலைவராம்.

 அது சரி.