அதிமுக பொதுச் செயலாளரிடம் ஓ.பி.எஸ்-மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா?

ம.பா.கெஜராஜ்,
பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு செய்திருக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.
அப்படியிருக்க கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஓ.பி.எஸ்.பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம் உட்பட அந்த கோஷ்டிகள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு பின்பற்றப்படும் வாடிக்கையை பின் பற்றுவார்களா என கேள்வியெழுகிறது.
ஆனால் ஏற்கனவே இவர்களை தவிர்த்து எந்த தொண்டன் வந்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அ.தி.மு.க.நிர்வாகம் அறிவிப்பு செய்தது. அதை வைத்து பார்த்தால் இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை.