ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!கோவிலை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு!

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!கோவிலை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு!

ஜி.கே.சேகரன்,

  55 புத்தூர் கிராமத்தில் உள்ள அசரீர்மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் - கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள 55-புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு  அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

  இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால்   இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதற்கு 55 புத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு  கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

   இருப்பினும் நேற்று  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோவிலை கையகப்படுத்த சென்றனர் ஆனால் கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு கோவிலை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அதிகாரிகள் தினறி திரும்பி சென்றதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  இந்த நிலையில் இன்று   வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 55- புத்தூர் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

 அவர்களுடன் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ், பாஸ்கர் ரெட்டியார் ஆகிய நிர்வாகிகள் இணைந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதை கண்டித்து திமுக அரசைக்கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

  பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்களை சந்தித்த போராட்டக்காரர்கள் கோவிலை அறநிலையத்துறை கையகபடுத்த கூடாது என கோரி மனு அளித்தனர்.