ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெளியாகப் போகும் உண்மைகள்!! பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு மூன்று நாள் போலீஸ் கஸ்டடி!

கு.அசோக்,
சென்னையின் மிகப்பெரிய ரவுடியான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
அதன் பேரில் அவரை போலீசார் வேலூர் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 23-பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலூர் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் பிரபல வட சென்னை தாதா நாகேந்திரன் 24-வது நபராக வழக்கில் சேர்க்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மகன் அஸ்வத்தமன் உடன் சேர்ந்து நாகேந்திரனும் வேலூர் மத்திய சிறையில் இருந்தே திட்டம் போட்டதாக செம்பியம் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்வதற்காக, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் வாரண்ட் பெற்று, கடந்த 9-ம் வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் கைது செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
அதற்கு பின்னர் நாகேந்திரன் பார்மல் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் நாகேந்திரனிடம் வழங்க முயன்ற போது,"கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னை எதற்காக வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள். என் மகன் அஸ்வத்தமனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் என்று கூறி கைது ஆவணத்தை வாங்காமல் அதில் கையெழுத்து போடாமல் போலீசாரிடம் ரகளை செய்தார்.
ஆவணத்தில் நாகேந்திரன் கையொப்பம் இட மறுத்த நிலையில், 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்த போலீசார், பின்னர் அவரின் கைதுக்கான ஆவணத்தில் சிறைத் துறை அதிகாரிகளின் கையொப்பம் பெற்ற னர்.
அதன் தொடர்ச்சியாக கைது ஆவணத்தை நாகேந்திரன் உள்ள அறைக்கு முன்பாக சுவரில் ஒட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் நாகேந்திரனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த 10 பேர்கொண்ட வேலூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்று அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரிடம் விசாரிக்க ஏழு நாள் அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசார் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நிலையில், மூன்று நாள் போலீஸ் நாகேந்திரன் இடம் விசாரணை நடத்த நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்
நாகேந்திரனை போலீஸ் கஸ்டடியில் விசாரித்த பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல உண்மைகள் தெரியவரும்.