இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து இரானை தாக்க திட்டம்! எடுத்துரைக்கும் ஊடகங்கள்!

ம.பா.கெஜராஜ்,
இரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக இரான் அறிவித்தித்துள்ளது. இதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதை போல் தெரிந்தாலும், மறுபக்கம் இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியிடப்ப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இரான் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தக்கூடும் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் என்கிற செய்தித்தாளின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டதாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி இந்த தகவல் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்குமாறு கமேனி இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை மற்றும் இரானிய ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாக்குதல் நடந்தால் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியதையும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
மற்றொரு இஸ்ரேலிய நாளிதழான ஹாரேத்ஸ், ஹனியே கொல்லப்பட்ட செய்திக்கு, 'ஹனியேவின் கொலை ஹமாஸுக்கு அடி' என்ற தலைப்பை அளித்துள்ளது.
"ஹனியேவின் படுகொலை ஹமாஸ் தலைமைக்கு ஓர் அச்சுறுத்தல். இரான் மற்றும் ஹெஸ்புலாவை ஆத்திரமூட்டச் செய்வதாக அது உள்ளது. இருந்தபோதிலும், ஹமாஸில் எந்தக் கிளர்ச்சியும் இருக்காது. மேலும் ஹமாஸின் அரசியல் பணியகத்தில் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் அந்த இடத்தை நிரப்புவார்," என்றும் அது கூறியுள்ளது.
இரானில் ஹனியேவின் கொலை, அமெரிக்கா போரில் இறங்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் எழுதியுள்ளது.
ஆனால் என்ன பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இரானில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. "ஹனியேவின் கொலைக்கு பதிலளிக்கும் வகையில் இரான் உறுதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டது" என்று பாலத்தீன செய்தி இணையதளமான பாலத்தீன குரோனிக்கிள் எழுதியது.
ஹமாஸின் அரசியல் தலைமையின் படுகொலைக்குப் பிறகு, காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் தடம் புரண்டு, பரந்த போருக்கான ஆபத்து இருப்பதாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று லெபனான் தீவிரவாத அமைப்பான ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடைய செய்தி இணையதளமான அல்-மயாதீன், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அரசியல் படுகொலை எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளதாதாக அல்மயாதீன் தெரிவித்தது. இதில் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி, போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்கிறார்.
செவ்வாயன்று தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புலாவின் உயர்மட்ட தளபதி ஃபுவாட் ஷோகோரை பற்றியும், அவர் அமைப்பின் உயர்மட்டத் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவுக்கு நெருக்கமானவர் என்றும் இணையதளத்தில் தெரிவித்திருக்கிறது.
பாலத்தீனப் பகுதியுடன் தொடர்புடைய மற்றொரு இணையதளமான 'மொண்டோவிஸ்', "ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா தலைவர்களைக் கொன்றதன் பின்னணியில் இஸ்ரேலின் உண்மையான நோக்கம் அதன் ராணுவ மற்றும் உளவுத்துறையின் மேன்மையை இஸ்ரேலிய மக்களுக்குக் காட்டுவதாகும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.
இப்படியாக ஊடகங்கள் போர் மேக சூழலை எதுத்துரைத்து வருகின்றன.