"வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்!"திருப்பத்தூர் ஆட்சியரின் வாசகம்!

"வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்!"திருப்பத்தூர் ஆட்சியரின் வாசகம்!

 ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டத்தில் தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களும்  மற்றும்  தாய்ப்பால்  தானமாக  வழங்கும் கொடையாளர்களுக்கும் பரிசு பொருட்களுடன், பொன்னாடை அணிவித்து மாவட்ட  ஆட்சித்தலைவர்  திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் கௌரவித்தார்.

 திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால்வார விழாவினை கொண்டாடும் வகையில் நேற்று (01.08.2024) பாலூட்டூம் தாய்மார்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தாய்ப்பால் வழங்குவதினால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித்து குழந்தை நல மருத்துவர் மரு. செந்தில் குமார் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

   தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் சராசரியாக, ஆண்டுக்கு பதினேழாயிரம் குழந்தைகள் புதியதாக பிறக்கின்றார்கள். இக்குழந்தைகளுக்கான முதல் உணவு தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம்.    

   சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப்பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

  குறைந்தபட்சம் 2 மணிநேரத்துக்கு  ஒரு முறை  குழந்தைக்கு  தாய்ப்பால் புகட்டுவது அவசியம். சீம்பால் தொடங்கி 2 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடமிருந்து  சிறப்பான  பாதுகாப்பு  கிடைக்கப்பெறுவார்கள்.

 தாய்ப்பால் சேய்க்குமட்டுமல்ல, தாய்க்கு செய்யும் நன்மைகள் பல. பாலுட்டுவதன் மூலம் அந்த தாய்க்கு பிரசவத்துக்குப் பிறகான உடல் எடைகுறைப்பு இயற்கையாக நிகழும். கருத்தரித்தல் தவிர்க்கப்படும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மிகமுக்கியமாக, பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று பேசினார்.

 பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்களுக்கு தமிழக அரசின் திட்டத்தின் வாயிலாக பிரசவித்த தாய்மார்களுக்கு பால் சுரப்பு தன்மையை பெருக்குவதற்கான சதாவரி  லேகியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இதில் கலந்து கொண்ட கொடையாளர் திருமதி.திவ்யா என்ற தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது போக சுரக்கும் தாய்ப்பாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கி வருகிறேன்.  என்னை போல தாங்களும் தாய்ப்பால் தானமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

   இத்தானத்தின் வாயிலாக வழங்கக்கூடிய தாய்ப்பால் பல எடை குறைந்த குழந்தைகளுக்கு உயிர்காக்கும் அமுதமாக இருப்பதாகவும், தாய்ப்பால் இன்றி இருக்கும் குழந்தைகளுக்கு அருமருந்தாகவும் இருக்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்து, அக்கொடையாளரை பாராட்டி, பொன்னாடை அணிவித்து பரிசுப்பொருட்களை வழங்கினார்.

   தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் மரு.செந்தில்குமார் அவர்களின் மருத்துவ சேவைக்காக தனது பாராட்டுதல்களை தெரிவித்து, "தாய்ப்பால் தானம் அளிக்க முன்வருவோம், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்போம், தாய்ப்பால் என்னும் அருமருந்தை புகட்டுவோம் - வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்!" என்ற வாசகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில்  இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.வி.கண்ணகி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சு.சித்ரசேனா, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.சிவக்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் திருமதி.சு.பியூலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு  :செய்தி  மக்கள் தொடர்பு  அலுவலர்,  திருப்பத்தூர்  மாவட்டம்.