காட்டாட்சியா நடக்குது! கவர்னரை சந்தித்த முதல்வர்! அவரை மாற்றக் கோரிய திமுக எம்.பி!

காட்டாட்சியா நடக்குது! கவர்னரை சந்தித்த முதல்வர்! அவரை மாற்றக் கோரிய திமுக எம்.பி!

ம.பா.கெஜராஜ்,

 இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். இவர்கள் சந்திதுக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக சீனியர் மினிஸ்டர் டி.ஆர்.பாலு ஆளுநரை மாற்றும்படி வலியுறுத்தியுள்ளார்.

  நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்முறை அதை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கும்படி முதல்வர் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ஆளுநர் ஓ.கே.சொன்னதாகவும் அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் டி.ஆர்.பாலுவின் நாடாளுமன்ற பேச்சு அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது.

  முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக முதல் அமைச்சரிடம் கவர்னர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக நிலுவையிலுக்கும்  மற்ற சட்ட முன்வடிவுகள் மீதும் நடவடிக்கை எடுக்க  கவர்னரிடம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.

  நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினார்.

  நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.

  அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

   2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதி  ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக  கவர்னரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

  இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் என அந்த செய்திக்குறிப்பில் தெறிவிக்கப்பட்ட்டிருக்கிறது.

காட்டாட்சியா நடக்குது! டி.ஆர்.பாலு

 இந்நிலையில்  மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை எழுப்ப உறுப்பினர்களை அனுமதிக்கும் நேரத்தில் டி.ஆர். பாலு அளித்திருந்த நோட்டீஸின்படி அவரை பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா அழைத்தார்.

  அப்போது பேசிய டி.ஆர். பாலு, "இந்திய அரசியலமைப்பு, மாநிலங்களில் ஆளுநராக இருப்பவர்களுக்கு மகத்தான அதிகாரங்களை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவிக்கு வந்தது முதல் ஏழு மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநரின் ஒப்புதலுக்கோ குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவோ கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், ஆளுநர்," இதுவரை அந்த மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருக்கிறார். 

  "இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன ஆகும்," என கேட்க, மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, "நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர். நீங்கள் எழுப்பும் பிரச்னை மாநில விவகாரம் தொடர்பானது," என்று கூறினார்.

  இருப்பினும் தொடர்ந்து தமது பேச்சைத் தொடர்ந்த டி.ஆர். பாலு, "இங்கு என்ன காட்டாட்சியா நடக்கிறது? நாங்கள் காட்டாட்சியை நடத்தவில்லை. அரசாங்கப் பணிகள் நடக்க சட்டத்தின் விதிகளின்படி ஆட்சி நடக்க விரும்புகிறோம்," என்றார்.

  மேலும் அவர், "தமிழ்நாடு கூட்டுறவு சங்க மசோதா-1983 உள்பட ஏழு மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றாமல் தமது பங்களாவில் ஆறு மாதங்களாக வைத்திருக்கிறார். இது சரியல்ல. பிறகு நாங்கள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது? அந்த ஆளுநரை மாற்ற வேண்டும்," என்றார்.

  ஒரு பக்கம் சந்திப்பு மறுபக்கம் போர்க்கொடி.. என்னதான் நடக்குது என்று பலரும் விணா எழுப்புகிறார்கள்.