தபால் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்! போலிஸ் குவிப்பு!!

கு.அசோக்,
புதியதாக அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் மூன்றாவது நாளாக பணி புறக்கணிப்பு செய்து ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் இரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 3-வது நாளான இன்று ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய அரசால் புதியதாக அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், மத்திய அரசு கொண்டு வந்த சமஸ்கிருத மொழியில் அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போலிசார் குவிக்கப்பட்டனர்.