நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை! சர்ச்சை பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!

ம.பா.கெஜராஜ்,
நாய் கூட பி.ஏ.பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பின்னர் அவர் வழக்கம் போலவே அதற்கு ஒரு மறுப்பும் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்படியிருக்க இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. "நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். ஆனால், நம்ம ஊரில் இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது. ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா? எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருககிறது" என்று பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில் வழக்கம் போலவே இதையும் அவர் சமாளித்தார்.
அந்த வகையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று அவரது சாமர்தியத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.