நண்பனுக்கு துரோகம் செய்தவர் உட்பட நால்வர் கைது!

நண்பனுக்கு துரோகம் செய்தவர் உட்பட நால்வர் கைது!

ஜி.கே.சேகரன்,

நண்பன் வீட்டருகே நம்பி நிறுத்திய வேனை உரிமையாளருக்கு தெரியாமல் விற்பணை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், பி,கஸ்பா பகுதியை சேர்ந்தவர் எழில்குமார். இவர் வேன் வைத்திருக்கிறார். அதை காலணி தொழிற்சாலைகளுக்கு வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழில் குமாருக்கு விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டதால் தன்னுடன் நண்பராக பழகி வந்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டின் முன் வேனை பார்க்கிங் செய்து வைத்துள்ளார்.

  இப்படி சில மாதங்களாக சக்திவேல் வீட்டின் முன் இருந்த வேன் கடந்த 3 ஆம் தேதி திருடு போனதாக, அதுகுறித்து 6 ஆம் தேதி சக்திவேல் வேன் உரிமையாளர் எழில்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு சென்று பார்த்த போது வேன் இல்லாததால் அதிர்ச்சியடைந்த எழில் குமார் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சக்திவேல் மீது சந்தேகம் அடைந்த போலீசார் சக்திவேலை பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

   வேன்  உரிமையாளருக்கு தெரியாமல் சக்திவேல் சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவர் மூலமாக 80 ஆயிரம் ரூபாய்க்கு தட்டப்பாறை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிலம்பரசன் சில நாட்களில் திருப்பத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

  இதனை தொடர்ந்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

  பழகியவரை நம்பி வேனை பார்க்கிங் செய்து வைத்த நிலையில் உரிமையாளருக்கு தெரியாமல் வேனை விற்பனை செய்து விட்டு நாடகமாடிய நண்பன் உட்பட நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.