ரூ.23 கோடியில் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

ரூ.23 கோடியில் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

ம.பா.கெஜராஜ்,

 ரூ.23 கோடியில் கட்டப்பட்ட  சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அத்துறையின் அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 சென்னையில் பொதுப்பணிதுறை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லாததால், தனியாக கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு, புதிய அலுவலக கட்டிடம் ரூ.23.05 கோடியில் மூன்று தளங்களுடன் 1,04,049 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

 முதல் தளத்தில், தலைமைப் பொறியாளர் அறை மற்றும் அலுவலகங்கள், கோட்டப் பொறியாளர் அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் தலைமை கட்டிடக் கலைஞர் அறை மற்றும் அலுவலகங்கள், நூலகம் மற்றும் கலந்தாய்வுக் கூடமும், மூன்றாம் தளத்தில் கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) அறை மற்றும் அலுவலகங்கள், கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டிட கட்டுமான உபகோட்டம் அலுவலகங்கள் செயல்படவுள்ளது.

  சென்னை, தரமணி, பொதுப்பணித்துறை வளாகத்தில் ரூ.35லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், பொதுப்பணித்துறை வளாகத்தில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான உணவுக் கூடம் உள்ளிட்டவற்றை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 40 வகையான சிவில் உபகரணங்கள் மற்றும் 8 வகையான மின் உபகரணங்கள் ரூ.6.80 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 இதன்மூலம் கட்டுமானப் பொருட்களின் 45 வகையான பண்புகளை கண்டறிந்து தரத்தை உறுதி செய்ய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் பயன்பாட்டிற்காக ஆய்வக உபகரணங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்களிடம் வழங்கினர்.

 நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தரமோகன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.