பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சி! சுன்னத் ஜமாத் அமைப்பினர் கைது!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சி! சுன்னத் ஜமாத் அமைப்பினர் கைது!

 உ.சசிகுமார்,

 பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சி செய்தமையால், தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பினர் போலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

  வட மாவட்டங்களான திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 இன்று பிப்-3 ஆம் தேதி, வேலூரில் அவர் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். அண்ணாமலையின் வேலூர் வருகையை யொட்டி அவரை வரவேற்று பொது இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதுடன், சாலையின் தடுப்பு வேலிகளில் கொடிகள் கட்டப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் என்கிற அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஷெரிப்பாஷா தலைமையில் அண்ணாமலைக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த ரகசிய தகவல் போலிசாருக்கு கிடைத்தது.

 அதனையடுத்து  வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலிசார், கறுப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த சுன்னத் ஜமாத் அமைப்பினரை கலைந்து போக அறிவுறுத்தியதுடன் மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, கமால்கான் என்பவர் உள்ளிட்டவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

  இதன் காரணமாக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் தடுக்கப்பட்டது.

   நேற்று வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மை பிரிவைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் அண்ணாமலை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டை வீசும் போராட்டம் நடத்த முயன்றார். அவரை போலிசார் தடுத்து வீட்டு காவலில் வைத்தனர் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.