வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ம.பா.கெஜராஜ்,
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்தற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவுறும் தருவாயில் இருந்த போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திருத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்தது. மேலும் இது "அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" எனவும் உத்தரவில் தெரிவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி உச்ச நீதிமன்றம் அப்பீல் செய்ய்யப்பட்டது. அதே போல் பா.ம.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குமணன் வாதாடுகையில், "இந்த விவகாரத்தில் உடனடியாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த தடை உத்தரவால் ஏற்கனவே கலந்தாய்வு பாதிக்கப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது கொடுக்க இயலாமல் இருக்கிறது" என்றார்.
பா.ம.க. மற்றும் மற்ற அரசியல் கட்சி தரப்பு வக்கீல்களும் இதே போன்ற வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை விதித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை விதிக்க மறுத்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, "இந்த வழக்கில் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. எழுத்துப்பூர்வமான வாதங்களை நீங்கள் தாக்கல் செய்யுங்கள். தற்போதைய சூழ்நிலையில் இந்த 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் நாங்கள் இடைக்கால தடை விதிக்க விரும்பவில்லை.
மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு தொடரும். அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெறும். அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.
புதிய பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவை இந்த இடஒதுக்கீட்டில் நடைபெறக்கூடாது. ஏற்கனவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் நடந்த மாணவர் சேர்க்கை நியமனத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.