வாக்களிக்காமல் டாட்டா காட்டிவிட்டு சென்ற வாக்காளர்கள்! பல இடங்களில் வாக்கு இயந்திரம் பழுது!

வாக்களிக்காமல் டாட்டா காட்டிவிட்டு சென்ற வாக்காளர்கள்! பல இடங்களில் வாக்கு இயந்திரம் பழுது!

 கு.அசோக்

மக்களவைக்கான வாக்குபதிவு இன்று நடைபெற்ற நிலையில், பல்வேறு மையங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

வேலூர்,

 வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட  கொணவட்டம் துவக்கப்பள்ளியில் வாக்குபதிவு இயந்திரம் பழுது மக்கள் பல மணிநேரம் காத்திருந்தனர்.

 வேலூர்மாவட்டம்,கொணவட்டத்தில் உள்ள தொடக்கபள்ளியில் மூன்று வாக்குசாவடிகள் உள்ளது இதில் ஒரு வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரம் பழுதாகி நின்றதால் வெயிலில் மக்கள் பரிதவித்து நின்றனர்.  பொறுமை இழந்த வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிகழ்வுகளை  செய்திக்குழுவினர் வீடியோ எடுக்கக்கூடாது என்று அங்கிருந்த அதிகாரி தடுத்தர். பின்னர் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு வேறு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குபதிவு நடந்தது.

 திருப்பத்தூர்,

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆதி பெரமனூர் ஊராட்சியில் தம்மா தெரு,

லட்சுமண் தெரு, விவேகானந்தர் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் 1058 வாக்காளர்கள் அதிபெரமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 37 மற்றும் 38 வாக்குச்சாவடி மையத்தில்  வாக்கு செலுத்தி வந்தனர்.

  இந்த நிலையில் 37 ஆவது வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் கண்ட்ரோல் யூனிட் கருவியில் திடீரென கோராறு ஏற்பட்டதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்காளர்கள் அவதிப்பட்டனர்.

  இதனை அறிந்த அதிகாரிகள் மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்ய முடியாத காரணத்தால் மற்றொரு புதிய மின்னணு வாக்கு இயந்திரத்தை மாற்றி வைத்த  பின்னர் வாக்கு பதிவு நடந்தது.

 எனவே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.

ஆம்பூர்

  அதே போல், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள இந்து நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள 74 வது வாக்கு மையத்தில் காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் 10 மணி அளவில் திடீரென வி.வி பேட் இயந்திரத்தில் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டது.,

  பின்னர் 11 மணிக்கு துவங்கபட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மீண்டும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து, பிறகு சொல்லியனுப்புங்கள் வருகிறோம் என்று டாட்டா காட்டிவிட்டு வாக்களிக்காமலேயே திரும்பச் சென்றனர்.

சென்னை,

  மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா போராட்டம் நடந்தது.

  சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள கேந்திர வித்யாலாயா பள்ளியில் 5 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்குள்ள 165-வது பூத்தில், பொதுமக்கள் நாம் தமிழர் கட்சியான மைக் சின்னத்துக்கு வாக்களித்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

 இதையறிந்த நாதக வேட்பாளர் கார்த்திகேயன், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பு அதிகாரிகளிடம் முறையிட்டார். இதனால், வாக்குப்பதிவு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதனால், வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் நேரமாவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காவல் துறையினர் கார்த்திகேயனை  அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றினர்.