போட்டுக் கொடுத்த உளவுத்துறை போலிஸ்! நடவடிக்கைக்கு ஆளான இன்ஸ்பெக்டர்!!

போட்டுக் கொடுத்த உளவுத்துறை போலிஸ்! நடவடிக்கைக்கு ஆளான இன்ஸ்பெக்டர்!!

ம.பா.கெஜராஜ்,

 ஸ்பா என்கிற பெயரில் விபச்சாரம், காட்டன் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களை கண்டும் காணாமல் இருந்தார் எனவும் புகார்தாரர்களிடம் முறையாக நடந்துக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டின் பேரிலும் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா ஆயுதப்படைக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். இந்த நடவடிகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் எடுத்துள்ளார்.

 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் மத்திய மாநில உளவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. சிறப்பு உளவுத்துறை அலுவலகம் எஸ்.பி. அலுவலகத்திலேயே இருக்கிறது.

 இதன் காரணமாக அலுவல் ரீதியாக சத்துவாச்சாரி எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

 இந்நிலையில் குற்றச்செயல்களுக்கும் இங்கு பஞ்சம் கிடையாது. குறிப்பாக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல தாதாக்களின் இருப்பிடமே இங்குதான் இருந்தது.

 மேலும் இல்லீகல் மது விடுதி, 24 மணி நேர மது விடுதி, காட்டன் சூதாட்டம், ஸ்பா என்கிற பெயரில் விபச்சாரம் போன்றவை இந்த பகுதியில் வெளிப்பட்டையாகவே நடந்துவந்தன. இதற்கெல்லாம் சத்துவாச்சாரி காவல் நிலைய போலிசாரின் ஆதரவும்  இருந்து வந்தது. கூடவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்து மாறுதல் செய்யப்பட்ட உளவு போலீஸ் ஒருவரும் இதற்கெல்லாம் பக்கபலமாக இருந்து வந்தார்.

  அவர் ஒரு சாராரை தூண்டிவிட்டதால் ஏரியூர் பகுதியில் பெரிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை கூட  ஏற்பட்டது. ஆகவே அந்த உளவு போலிஸை சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கடிந்து கொண்டாராம்.

  இதனால் முகம் சிவந்த அந்த உளவு பார்ட்டி இன்ஸ்பெக்டரை குறித்து பல தகவல்களை வெளியிட வைத்தார் என்று கூறப்படுகிறது.

 அந்த வகையில் சத்துவாச்சாரி ஊர் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடத்தும் பாஜகவைச் சேர்ந்த ஒருவருடன் இவர் தெலுங்காணா மாநில துங்கபத்திராவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வந்தார் என தகவல்கள் கசிந்தது. மேலும், சத்துவாச்சாரி நீர்வீழ்ச்சி சாலையில் உள்ள ஒரு விடுதியில் விபச்சாரம் நடப்பதாகவும் இவர் அந்த விடுதியில் தான் தங்கியிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

 பட்டும் படாமலும் வெளியான இந்த தகவலுக்கு உளவுத்துறையைச் சேர்ந்தவர்தான் காரணம் என்பது ஊர்ஜிதமானதால் அவர் காட்பாடி போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

 அதே நேரம் சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த லாட்ஜில் இருந்து ஷிப்ட் ஆகி வேறு லாட்ஜில் போய் தங்கினார்.

 இவர்களை எஸ்.பி.நேரடியாக அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதாக தகவல். அதே நேரத்தில் இவர் பற்றின புகாரை மேலிடத்துக்கும் நடவடிக்கைக்காக அனுப்பிவைத்தார் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு.

 இது ஒருபுறம் இருக்க, வேலூர் தெற்கு மற்றும் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிஷா என்பவர் ஸ்பா என்கிற பெயரில் விபச்சார தொழில் செய்து வந்துள்ளார். இதில் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள விடுதியில் அவர் பிஸினஸ் கொடிகட்டி பறந்த நிலையில், இடையே அந்த விடுதியின் உரிமையாளருக்கும், நிஷாவுக்கும் இடையே பெரிய மோதல் உண்டானது.

 இதனை அறிந்த சத்துவாச்சாரி அதிகாரி நீங்க நம்ம லிமிட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அழைத்ததாகவும், அதன் பேரில் அந்தம்மா ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் முக்கிய பகுதியில் இடம் பிடித்து தம்முடைய தொழிலை தொடங்கியிருக்கிறார்.

 இது குறித்து செய்திகள் வெளியானதை அறிந்த டிஎஸ்பி தலைமையிலான டீம் அந்த இடத்தை ரைடு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

  இது போன்ற காரணங்களால் தற்போது இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

படங்கள்;ஆ.ஜோ.