உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசு இன்று முதல்வருடன் கலந்தாலோசித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் - உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்கவில்லை காட்பாடியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடி, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் நிதியுதவி பெறும் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கண அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கிறார்கள். தமிழக அரசு முதல்வருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா என்பதை இன்று முடிவு செய்வோம்.
கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சணை என்பதும் வேறு. அதிமுக ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது?
இது காலம்காலமாக உள்ள பிரச்சனை தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள்.
இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும் ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது என சொன்னார்.