பெண் காவலர்கள் என்னை தாக்கினார்கள்! சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் முறையீடு!

டி.இ.முகமது,
பெண் காவலர்கள் என்னை தாக்கினார்கள் என்று சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார். இன்று மே-15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து சவுக்கு சங்கர் ஃபோர்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். அப்போது பாதுகாப்பு பணிக்காக முழுக்க முழுக்க பெண் போலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சவுக்கு யு டியூப் சேனலின் உரிமையாளர் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் சவுக்கு சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 4-ல் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, சவுக்கு சங்கரை திருச்சி போலீஸார் புதன்கிழமை காலை கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து அவரை திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது சவுக்கு சங்கருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் துடைப்பத்துடன் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். திருச்சி நீதிமன்ற வளாகத்திலும், நூற்றுக்கும் அதிகமான பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடிருந்தனர்.
திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்பு நடந்த விசாரணையின்போது சவுக்கு சங்கர், இன்று காலை கோவை மத்திய சிறையில் அழைத்து வந்த பெண் போலீஸார், காலை உணவுக்கு பொங்கல் வாங்கி தந்துவிட்டு, கண்ணாடியை கழட்டிவைக்கச் சொல்லிவிட்டு, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு திருச்சி மகாத்மாக காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கரை முழுக்க முழுக்க பெண் போலிசாரே அழைத்து வந்தது அவருக்கு சவுக்கடி கொடுத்தத்தை போல அமைந்திருந்தது.