சி.எம்.சி.யில் டாக்டர் சீட்டு வாங்கி கொடுப்பதாக பணம் பறிக்கும் மோசடி நபர்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சி.எம்.சி.யில் டாக்டர் சீட்டு வாங்கி கொடுப்பதாக பணம் பறிக்கும் மோசடி நபர்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 ஐடாஸ்கடர் அம்மையார்

 பிறந்தது - அமெரிக்கா - தேதி. 09.12.1870.

 இறந்தது - வேலூர்   - தேதி. 24.05.1960.   

 வேலூர் மாவட்டம், வேலூர், பாகாயத்தில் சி.எம்.சி. என்கிற கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஐடாஸ்கடர் அம்மையார் தான் இதை நிறுவினார். மருத்துவ படிப்புக்கு மிகவும் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியில் டாக்டர் சீட்டு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அந்த அளவுக்கு அங்கு கற்பிக்கப்படும் மருத்துவக் கல்விக்கு மவுசு அதிகம்.

  இந்த சூழலைப் பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் சிஎம்சி யில் டாக்டர் படிப்புக்கு சீட்டு வாங்கி தருகிறோம் என்று பொய் சொல்லி கோடிக் கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு பலரை மோசடி செய்து வருகிறார்கள். ஐடாஸ்கடர் அம்மையார் பார்த்து பார்த்து செதுக்கி உருவாக்கிய சிஎம்சி யை மையப்படுத்தி மோசடி செய்து வரும் கும்பல் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் கேராளாவில் அதிகம் உள்ளனர்.   

 இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் காவல்துறை அதிகாரியிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

 அந்த புகாரில் எனது மகள் சத்யபிரியா 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். நாங்கள் அவளை வேலூரில் உள்ள சிஎம்சி யில் மருத்துவ படிப்பில் சேர்க்க விரும்பினோம். அதற்காக முயற்சிகளை மேற்கொண்ட போது எங்களுக்குத் தெரிந்த நண்பர் மூலமாக தலைமை ஆசிரியர் ஒருவர் அறிமுகமானார்.

அவரை சந்தித்து எங்களது விருப்பத்தை சொன்னோம். என்னுடைய மகளின் பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்ட அவர் ரூபாய் 70 லட்சம் செலவாகும் என்றார். ஒப்புக்கொண்டு நாங்கள் இரண்டு தவணையாக ரூ.70 லட்சத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்த தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன்.

   நீட் தேர்வில் எனது மகள் தேர்ச்சி பெற்று விட்டார். அதன் அடிப்படையில் அவருக்கு இரண்டு கல்லூரிகளில்  மருத்துவ சீட்டுக்கான வாய்ப்பு கிடைத்தது.

 பணம் பெற்ற தலைமை ஆசிரியரிடம் இது குறித்து சொன்னபோது, உங்க மகளை எந்த கல்லூரியிலும் சேர்க்க வேண்டாம். நான் கண்டிப்பாக சிஎம்சி- யில் உன் மகளுக்கு அட்மிஷன் பெற்று தருகிறேன். அவள் சிஎம்சி மருத்துவமனையில் தான் டாக்டர் படிப்பாள் என்று வாக்குறுதி சொன்னார்.

   ஆனால் சிஎம்சியில் மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியான போது என் மகளது பெயர் அந்த பட்டியலில் இல்லை. ஆகவே அவரிடம் இது குறித்து கேட்டபோது எதையோ சொல்லி சமாளித்தார்.

  இதனால் என் மகளுடைய வாழ்க்கை ஒரு வருடம் வீணாக போனது.

  நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் கூட அவளுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கடந்த ஆண்டு தவறி போனது. அதற்கு காரணம் என்னிடம் பணம் பெற்ற அந்த தலைமை ஆசிரியர் தான்.

 ஆகவே அவரிடம் கொடுத்த எழுபது லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடும்படி கடந்த 10 மாதமாக கேட்டு வருகிறேன். ஆனால் இதோ அதோ எந்த சாக்கு சொல்கிறாரே தவிர பணத்தை கொடுக்கவில்லை.

   என் மகளுக்கு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றி பணம் பெற்ற அந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை திருப்பி பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறியிருக்கிறாராம்.

 இதன் மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க உயரதிகாரி உத்தரவிட்டு புகார் மனுவை பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் அதில் சிலர் இடைத்தரகர்களாக நுழைந்து விசாரணை அதிகாரிக்கு முட்டுக்கட்டை போட்டு வெளியில் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து வருகிறார்களாம். 

 இந்த தலைமை ஆசிரியரைப் போலவே, பல்வேறு நபர்கள் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் சீட்டு பெற்றுக் கொடுப்பதாக பண மோசடி செய்து வருவதாக நிர்வாகம் சார்பாக பலர் புலம்புகிறார்கள்.  

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,  

தமிழ்நாடு அரசு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 100 மருத்துவ மாணவர்கள் நிர்வாகத்தினரால் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் 2014 நீட் தேர்வு அறிமுகத்துக்கு பின்னர்  50 சீட்டை நிரப்பும் அதிகாரத்தை அரசு எடுத்துக் கொண்டது.

 அது போக மீதி உள்ள 50 சீட்டில் 30 சீட் சிறுபான்மையர் என்கின்ற கோட்டாவில், சுழற்சி முறையில் பேராயங்களுக்கு அளிக்கப்படும். அதிலும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்களுக்கு இவை அளிக்கப்படும்.

 அதேபோல் சிஎம்சி கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் மருத்துவர்கள் பிள்ளைகளுக்கு 10%  மறும் இத்யாதி ஒதுக்கீடுகளுடன் 50 சீட்டுகளை நிரப்பி கொள்ள வேண்டும்.

 நிர்வாகம் நிரப்பும் இந்த கோட்டாவில் பேராயர்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகள் கூட சிபாரிசின் அடிப்படையில் ஒதுக்கப்பட மாட்டாது.

 உதாரணத்திற்கு வேலூர் பேராயத்தில் 100 பேர் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்றால், அதில் முதலாவதாக வருவது யார் இரண்டாவது வருவதாக யார் என்பதை உடனடியாக சிஎம்சி அளித்துள்ள இணையத்தில் பதிவிட வேண்டும். அதன் அடிப்படையில் தான் சீட்டு கொடுக்கப்படும்.

  மெடிக்கல் போர்டு இயக்குனரோ, பிஷப்போ அல்லது மாடரேட்டரோ, வேறு எந்த அதிகாரத்தில் உள்ளவரோ குறுக்கு வழியில் இங்கு மருத்துவ சீட்டை பெற முடியாது என்கின்ற நிலை தான் யதார்த்தம்.

 அப்படி இருக்க சிஎம்சி மருத்துவமனையில்,  மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை பெற்று தருவதாக கூறி பல இடைத்தரவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

 குறிப்பாக மருத்துவமனையில் பணிபுரியும் சிலருடன் நட்பு வைத்துக் கொண்டு, அதை காட்டி ஏமாற்றுகின்றனர். ஆனால் பணியாளர்களுக்கே அது தெரியாது. அதே போல் ஏதாவது நிகழ்ச்சிகளில் போட்டோ எடுத்துக்கொண்டு அதை தவறாக பயம்படுத்தி சில இடைத்தரகர்கள் ஏமாற்றிவருகின்றனர்.

 கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தில் பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது.

 அதேபோல் தமிழகத்தில் தென்மாவட்ட பகுதிகளிலும் சிலர் சிஎம்சி நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சீட்டு பெற்று கொடுப்பதாக சொல்லி பண மோசடி செய்து வருகிறார்கள்.

 ஆகவே முன்பே சொன்னபடி அனைத்து விதிமுறைகள்படி தான் இங்கு மருத்துவ படிப்புக்கான சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எந்த சிபாரிசு இருந்தாலும் இங்கு சீட்டு வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே சிஎம்சி யில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று விருப்பப்படும் மாணவ மாணவிகள் நன்கு படிக்க வேண்டும். இது போன்ற மோசடிக்காரர்களை நம்ப கூடாது அதேபோல பெற்றோர்களும் ஆசை வார்த்தை கூறும் இடைத்தேர்தல்களை நம்பி பணம் ஏமாற வேண்டாம் என்றனர்.

குறிப்பு:-சி.எம்.சி.யில் டாக்டர் படிப்பைப்போலவே பல்வேறு விதமான மருத்துவ துணைபடிப்புகள் உள்ளன. அதற்காக ஊரிசு கல்லூரி உட்பட பல இடங்களில் தற்போது சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து நடத்தப்பட்டு வருகிறது.