போர் மேகம்.... சீன பொருட்களை இந்தியர்கள் வாங்குவது வருத்தமளிக்கிறது! சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

போர் மேகம்.... சீன பொருட்களை இந்தியர்கள் வாங்குவது வருத்தமளிக்கிறது! சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

 ஜி.சாந்தகுமார்,

இந்திய எல்லையில் சீனா திடீரென ராணுவப் படைகளை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த படைக்குவிப்பு அசாதாரணமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

  இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய மாநிலங்களை தன்வசப்படுத்தி, சர்வதேச தளத்தில் இந்தியாவை தன்னை விட பலவீனமான நாடு என்று பறைசாற்றுவதே சீனாவின் ஒற்றை நோக்கமாக உள்ளது.

 ஆனால், சீனாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் குட்டு வைத்து வரும் இந்தியா, சீனா கொடுக்கும் அடிக்கு இரட்டிப்பு பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக 2020-ம் ஆண்டு லடாக்கில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்களை, துரத்தி துரத்தி இந்திய ராணுவ வீரர்கள் அடித்த சம்பவம் சர்வதேச தளத்தில் அந்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

 இந்த அவமானத்தைத் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது சீனா. இந்திய எல்லைகளுக்கு அருகே ராணுவ தளங்களை குவிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என சீனா தொடர்ந்து போர் தொடுக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்தான், தற்போது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், லடாக், மிசோராம் உள்ளிட்ட பல வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ வீரர்களை வரைமுறை இல்லாமல் சீனா குவித்து வருகிறது.  

   இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறுகையில், "1962 இந்திய - சீன போருக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. அதன் பிறகு 1988-இல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி பல முறை சீனாவுக்கு சென்று இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த முயன்றார்.

  அந்த சமயத்திலும், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், எல்லையில் அமைதி நிலவ இரு நாடுகளும் விரும்பின.

  ஆனால் 2020-ம் ஆண்டுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டன. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீன ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் அடித்து விரட்டியது வேறு கதை.

  ஆனால், அதன் பிறகு லடாக்கில் தொடர்ந்து படைக்குவிப்பில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது சாதாரண விஷயம் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பை யாரும் அலட்சியம் செய்யக் கூடாது. அதை பார்த்துக் கொண்டு இந்தியாவும் வேடிக்கை பார்க்காது. இந்தியர்களும் இதை அனுமதிக்கக்கூடாது.

  ஆனால், இத்தனை பிரச்சினைகளுக்கு பிறகும், எதற்காக சீனாவிடம் பெரிய அளவிலான வர்த்தகத்தை இந்தியர்கள் செய்து வருகின்றனர் என்று எனக்கு புரியவில்லை என ஜெய்சங்கர் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்