சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்யும் பிரதமர்! தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு!
எஸ்.செல்வராஜ்,
சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்க வெட்கமாக இல்லையா? என்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சார கூட்டங்களில் பேசிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார்.
அவர் பேசியதாவது:- தேர்தல் வந்துவிட்டால் கூடவே மக்கள் மேல் மோடிக்கு கரிசனமும் வந்துவிடுகிறது.
திடீரென விலையை குறைப்பார். இப்போது கூட சிலிண்டர் விலையையும் பெட்ரோல் டீசல் விலையையும் குறைத்திருக்கிறார். விலையை ஏற்றியது யார், மோடி பிரதமரான நாள் முதல் விலை ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால் விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருப்பார். தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும்.
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையை குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருது, அப்போதெல்லாம் குறைத்தாரா இல்லையே! அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும் இந்திய குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்! என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு. தேர்தலுக்கு தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்.
மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு 2013 ஆம் ஆண்டுக்கு முன்னால் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது, வெறும் ரூ 410/-
ஆனால் 10 ஆண்டுகள் கழித்து 1103 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் வந்தது. கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது. சிலிண்டர் விலை குறைந்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார்.
தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது பச்சோந்தி அரசியல் இல்லையா! ரூ 410 க்கு இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேலஸ் உயர்த்தியது தான் உங்களின் சாதனை. தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக் குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம்.
அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழகம், இப்படிப்பட்ட பிரதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா, மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களவை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார், என்ன தெரியுமா?
தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள். ஒரு மிக்ஸி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? மோடியின் கேரண்டி: "ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்ற ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர் "இது மோடியின் கேரண்டி" என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை.
பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், 10 ஆண்டுகளாக சொன்ன எதையுமே செய்யாமல் சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்க வெட்கமாக இல்லையா?
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என சொன்னாரே என்ன ஆனது. உலகத் தொழிலாளர் அமைப்பு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83% இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும் கேரண்டியின் லட்சணம்!
புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார் என ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

admin
