இலங்கையில் ஆறாவது முறையாக பிரதமர் பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே! நாளை 15 மந்திரிகள் அமருகிறார்கள்!

ம.பா.கெஜராஜ்
இலங்கையின் பிரதமர் பதவியை சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,
ரனில் விக்ரமசிங்கே பிரதஅராக பதவியேற்றார்
பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
ராணுவத்தினரால், போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், தீக்கரையாயின.
வன்முறை சம்பவங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை மேற்கொண்டார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
அப்படியிருக்க பிரதமர் பதவியை ஏற்பதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு ரனில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரனில் பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6வது முறையாக அவர் பிரதமர் ஆகி உள்ளார்.
நாளை அவரது அமைச்சரவையில் 15 மந்திரிகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.