கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரமா?

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரமா?

எஸ்.விஜய்,

 அரசு அலுவலர்களைப் பொருத்தவரை கண்கெட்ட பின்னரே சூரிய நமஸ்காரம் செய்வார்கள். அதே அவர்களுக்கு சம்பல உயர்வு, விடுப்பு, ஓய்வூதியம் என்றால் உடனடியாக வீதிக்கு வந்துவிடுகின்றனர். இதை நாம் பலகாலமாக பார்த்து வருகிறோம் அல்லவா.

 அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பாய்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

 நாமக்கல் அருகே சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் உணவங்களில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில்  வேலூர்மாவட்டப் பகுதிகளில்

ஷவர்மா தயாரிக்கப்படும் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப., உத்தரவிட்டத்தின்படி மாவட்ட முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

   இதன் ஒரு பகுதியாக காட்பாடி பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான ராஜேஷ், கந்தவேல் ஆகிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்பொழுது கோழி இறைச்சியை சேமித்து வைத்திருந்த 4 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்யப்பட்டது.

  அதே போல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப.,  உத்தரவிட்டதன்படி திருப்பத்தூர் மாவட்ட முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி, தலைமையில் துரித மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்தனர்.

  அப்போது தந்தூரி, கிரில் சிக்கன்களில் அதிக வர்ணம் சேர்க்கக் கூடாது. முதல் நாள் பயன்படுத்திய எண்ணெயை, மறுநாள் பயன்படுத்தக் கூடாது. ஓட்டல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் இறைச்சிகளை அடுத்த நாள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துவது பரிசோதனையில் தெரிய வந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

   பின்னர் இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் 11 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு கடைக்கு லைசன்ஸ் வாங்கவில்லை. அந்தக் கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் 2 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.

  அவற்றில் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் இருந்த பழைய கிரில் சிக்கன் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

   மேலும் சாலையில் ஷவர்மா, சிக்கன் பக்கோடா, லாலிபாப் போன்ற இறைச்சி உணவுகளை தயாரிக்கும் துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்பொழுது உணவு பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? இறைச்சி வகைகள் தினமும் கொள்முதல்  செய்யப்படுகிறதா! அதற்கான ஆவணம் மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கான தகுதி உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.

   அனுமதியில்லாத பொருட்களைக் கொண்டு உணவு வகைகள் தயாரிக்க கூடாது ஒருமுறை பயன்படுத்திய எண்ணை வகைகள் மீண்டும் உபயோகிக்க கூடாது. இறைச்சியை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும் குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.