போதை பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை மீட்ட திருப்பத்தூர் கலெக்டர்! அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று விடுதியில் சேர்த்தார்!

R.Ramesh,ம.டில்லிராஜன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மாடப்பள்ளி ஊராட்சி, அண்ணா நகர் பகுதியில் சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்த நிலையை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தாய் தந்தை இருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, மேலும் அவர்களுடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் பெற்றோர் போதைக்கு அடிமையாகி பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதில்லை, பிள்ளைகளுக்கு தேவையான அன்றாட தேவைகளை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், ஒன்பதாவது வகுப்பு பயிலும் மாணவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக தன்னுடைய வாகனத்திலேயே அழைத்து சென்று திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி பயில்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் நேரடியாக அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, சம்மந்தப்பட்ட பெற்றோர் போதை நிலைப்பாட்டிலிருந்து மாறாத நிலையை அறிந்தார். இரண்டு பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் பெற்றோருக்கு தெரிந்த தொழிலை மேற்கொள்ள ஏதுவாக கடன் உதவியை பெற்றுத்தரவும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவர்கள் திருந்துவதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி தாங்கள் தங்கியுள்ள வீட்டையும் அவர்களின் பிள்ளைகளையும் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வழி நடத்த ஏதுவாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இத்தகவல் தெரிவித்து மேலும் இவர்களை கண்காணிக்கும்படியும் இதில் தவறும் பட்சத்தில் தாய் தந்தை இருவரையும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு, இரண்டு பிள்ளைகளையும் அரசின் பராமரிப்பில் தங்கி பயில்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பானு, சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.