செந்தில் பாலாஜி கைது!! நடை பயிற்சி முதல் -அட்மிட்வரை!

ம.பா.கெஜராஜ்,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.
நடை பயிற்சி,
அப்போது நடைபெயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தகவல் சென்றவுடன் அவர் டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்ததாக அவரே சொன்னார்.
மேலும், அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.
அப்போது அமைச்சரின் இல்லத்திற்கு வழக்கறிஞர்கள், திமுக தொண்டர்கள் வந்திருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியூ-வில் சிகிச்சை,
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை எனத் தகவல் வெளியானது. காலை 9 மணிக்குப் பிறகுதான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் சேகர் பாபு அவரை சந்திக்க சென்றார். அப்போது, செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவித சமிக்ஞையும் அவரிடம் இருந்து வரவில்லை. சுயநினைவின்றி உள்ளார் எனத் தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் முதலில் தெரிவிக்கவில்லை.
கைது நடவடிக்கை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை,
கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மனித உரிமை மீறிய செயல்,
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர். இதையடுத்து, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்.
எந்தக் காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் ரைடு நிறைவு,
இது ஒருபக்கம் இருக்க, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நிறைவடைந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 நாட்கள் வரை சிகிச்சை,
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ''அமைசச்ர் செந்தில் பாலாஜியின் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தை நாட முடிவு,
முக்கியமான இரண்டு துறைகள் செந்தில் பாஷ்லாஜியிடம் உள்ளது, இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த பிரச்சினையை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.