பா.ஜ.வை விட்டு விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியைராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் ஜெகதீஷ் ஷெட்டர் கூறி வந்தார். இதனால் பா.ஜ. கட்சியினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் மூத்த தலைவரான ஷெட்டர் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முதலமைச்சர், சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என கட்சி அறிவுறுத்தியதாம்.
இது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் இன்று கூறுகையில், கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர். கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். தனக்கு எதிராக சதி நடக்கிறது. அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என தெரிவித்தார்.
அப்படி சொன்ன ஜெகதீஷ் ஷெட்டர் தனது பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து இன்று நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து, அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்தார்.
அதே நேரத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸிக்கு வந்தால் அவரை இணைத்துக் கொள்வோம் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.