தமிழகத்தை சுற்றி வளைக்கும் தேசிய தலைவர்கள்!

தமிழகத்தை சுற்றி வளைக்கும் தேசிய தலைவர்கள்!

ம.பா.கெஜராஜ்,

  வாக்கு பதிவுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. பிரச்சாரம் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தேசிய தலைவர்களின் முற்றுகையால் தமிழகத்தில் பிரச்சாரம் வேகமெடுத்திருக்கிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், மோடி 7வது முறையாக நேற்று தமிழகம் வந்தார். பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோடு ஷோவில் பங்கேற்றார்.

 மேலும் இன்று வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது நீலகிரி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து வரும் 13, 14ம் தேதியும் தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

  அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, அனுராக் தாகூர் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தமிழகத்தில் பிரசாரத்திற்காக அடுத்தடுத்து தமிழகத்தை சுற்றி வளைக்க இருக்கிறார்கள்.

  நேற்று விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தார்கள். ஆகவே அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்கள் காலை முதல் இரவு வரை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் எல்லா தெருக்களிலும் எங்கு திரும்பினாலும் வேட்பாளர்களின் பிரசாரமாக காட்சியளித்தது.

 தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேனி, திண்டுக்கல் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதே போல, முக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  திருச்சியிலும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கடலூர், சிதம்பரம் தொகுதியிலும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெரம்பலூர், திருச்சியிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  தேனியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போட்டியிடும் முகமது முபாரக்கை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மயிலாடுதுறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதே போல பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூர், நீலகிரி, கோவை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் தீவிரமடைந்திருக்கிறது.