விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5ஆயிரம்!சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்!

ஜி.கே.சேகரன்,
விபத்தில் சிக்குபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் கொண்டு சென்று சேர்ப்பவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் மேல்மருவத்தூரில் நாளை மறுநாள் முதல்வர் துவங்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.
நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசியை செலுத்தாத ஊராட்சி தலைவர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கபடும் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில், தமிழ்நாடு மருத்துவத்துறை மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் வேலூர்.ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கோவிட் 19 தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இதில் அமைச்சர்கள் துரைமுருகன்,காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் 743 கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் சுய உதவி குழுக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
திட்டத்தை துவங்கி வைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் 52 சதவிகிதம் தான் உள்ளது.
கொரோனா தடுப்பூசி உயிரைகாக்கும் என மக்களிடம், விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த புதிய முறையை துவங்கியுள்ளோம்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஊராட்சி தலைவர்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள நீங்கள் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு ஜனவரி 26 ஆம் தேதி பாராட்டு சன்றிதழ் அரசு சார்பில் வழங்கபடவுள்ளது.
இம்மாவட்டத்தில் 743 கிராம ஊராட்சிகளில் 5 ஊராட்சிகளில் மட்டுமே 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் 1325 ஊராட்சிகளில் மட்டும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஒமைக்கரான் நோய் தாக்கம் தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு பாதிப்பு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு நோய் தொற்று உள்ளதாக மைய அரசு அறிவிக்கும்.
தமிழகம் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக சுகாதாரதுறையில் விளங்குகிறது.
தமிழக அரசு துவங்கிய இல்லம் தேடி மருத்துவத்தில் 39.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
நாளை மறுநாள் மேல்மருவத்தூரில் தமிழக அரசு சுகாதாரத்துறையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை துவங்குகிறோம்.
இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 என்ற திட்டம் மாநிலத்தில் எங்கு சாலைவிபத்து ஏற்பட்டாலும் அந்த சாலைவிபத்தில் சிக்குபவர்களை 205 அரசு மருத்துவமனை, 405 தனியார் மருத்துவமனை ஆக 610 மருத்துவமனைகள் ஏதேனும் ஒன்றில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் சேர்ப்பவர்களுக்கு ஊக்கதொகையாக வழங்கபடும்.
இதன் மூலம் உயிர்கள் காக்கப்படும் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் சிகிச்சை அரசு சார்பில் அளிக்கப்படும்.
இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் உயிர்களை காக்க முடியும், தடுப்பூசி போடாத அனைவரையும் தடுப்பூசி போட வைக்க நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.
பின்னர் விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இந்த மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசியை நூறு சதவிகிதம் போட்டுகொள்ள ஊராட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நூறு சதவிகிதம் எட்டாத ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களுக்கு நாங்கள் கட்டாய விடுப்பை அளிப்போம் என்று பேசினார்.