கெஜ்ரிவால் 2 ஆம் தேதி ஜெயிலுக்கு திரும்புவதால் முன்கூட்டியே இந்தியா கூட்டணி கூட்டம்!

ம.பா.கெஜராஜ்,
இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என்று சொல்லப்பட்டு வரும் கள நிலவரத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே கடைசி கட்ட வாக்குபதிவு நடைபெறும் ஜூன் 1 ஆம் தேதி டெல்லியில் கூடி யார் பிரதமர் என்பதை ஆலோசிக்கவிருக்கிறார்கள்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் ஜூன் 2 ஆம் தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும் என்பதினால் அதற்கு முன் தினம் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி எனும் வலுவான கூட்டணியை அமைத்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் களமிறங்கி உள்ளன.
இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. முதலில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமர் குறித்து முடிவெடுக்கவும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து முடிவெடுத்தன.
அப்படியிருக்க தேர்தல் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி டெல்லியில் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க மல்லிகார்ஜூன கார்கே நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதில், இந்தியா கூட்டணியின் தேர்தல் செயல்பாடு குறித்தும், அடுத்தகட்ட உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த கூட்டம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், மக்களவை தேர்தலுக்கு முன்பாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். கெஜ்ரிவாலின் ஜாமீன் வரும் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், கெஜ்ரிவாலின் ஜாமீன் முடியும் முன்பாக இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் ஜூன் 1ம் தேதியுடன் மக்களவை தேர்தல் முடிவடைந்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அந்த நேரத்தில் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே முன் கூட்டியே இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.