மாவட்ட ஆட்சியர்களை எச்சரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ப.சீனிவாசன்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏதோ பொருட்களை சரியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மிரட்டல் இல்லை, மாறாக ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும். அதே போல் பிரதமரின் பேனர் அகற்றப்படாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கையின் நோக்கமாகும்.
இது பற்றின விவரம் வருமாறு,
தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அப்போதுதான் அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.