சரக்கு பார் போல் காட்சியளிக்கும் ஏலகிரி திரையரங்கு!

ஜி.கே.சேகரன்,
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலை தற்போது, குடிமகன்களின் கூடாரமாக மாறியிருக்கிறது. அதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு இருக்கும் திறந்தவெளி திரையரங்கை பராமரித்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான திறந்த வெளி திரையரங்கு உள்ளது. இந்நிலையில் அந்த இடம் பராமரிப்பின்றி பாழடைந்து குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஏலகிரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.அவர்களுக்கு மலைவாழ் மக்களின் கலாச்சாரம் பண்பாடு வாழ்வியலை திரையிட்டு காண்பிக்கும் வகையில் அரசு மூலமாக திறந்தவெளி திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க, வழக்கமாக படகு இல்லம், பூங்கா, காட்டு வழிப்பாதை உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் வந்து செல்லும் நிலையில் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் இருக்கும் திறந்தவெளி திரையரங்கு பராமரிப்பின்றி குடிமகன்களின் கூடாரமாக மாறி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர் குஷ்வாஹா பாழடைந்து கிடக்கும் திறந்தவெளி திரையரங்கை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக திறந்தவெளி திரையரங்கை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.