கோவிலை சுத்தம் செய்த மாணவர்கள்!

க.பாலகுரு,
நன்னிலம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நன்னிலம் அரசு கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஒரு வார சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட நன்னிலம் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஸ்ரீவாஞ்சியம் கோயில் தூய்மைப்படுத்தும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஐந்தாம் தேதி புதன்கிழமை முதல் ஒரு வார காலம் நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்றத் தொடக்க விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு முகாமைத் துவக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்ரீவாஞ்சியம் கோயில் பகுதிகளை திட்ட அலுவலர் முனைவர் மீ.ராஜேஸ்வரன் தலைமையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுகாதார விழிப்புணர்வுப் பேரணி, தனி நபர் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு யோகா, மனவளக்கலைத் தியானப் பயிற்சி பூந்தோட்டம் சாய்பாபா தியான பீடத்தில் யோகா ஆசிரியர் வீ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் பிரணாயாமம், ஆசனங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வுப் பயிற்சியும் நடைபெற்றது.
ஸ்ரீவாஞ்சியம் பகுதி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வுக் குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட பணிகளை திட்ட அலுவலர் முனைவர் ச. ராதிகா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் மே.பத்மநாபன், பேராசிரியர்கள் அறிவழகன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினர்.