டிஎஸ்பி - இன்ஸ்பெக்டர்கள் மீது திமுகவினர் தாக்கு! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு!

டி.இ.இர்பான்,
கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்துக்கு வந்தவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தி, அடித்து உதைத்து சட்டை மற்றும் பேன்டை உருவினர். அதுமட்டுமின்றி சுரங்கத் துறை அலுவலகத்தில் பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். தடுக்கவந்த போலீஸார், அரசு அலுவலர்களும் தாக்கப்பட்டனர். இது தாக்குதல் தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
மிது பற்றின விவரம் வருமாறு,
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், கல்பாடி, திருவளக்குறிச்சி, செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 31 கல் குவாரிகளுக்கான ஏலம் நேற்று (அக்.31) நடைபெறுவதாகவும், இதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (அக்.30) கடைசி நாளாகவும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன் பேரில் பாஜக தொழில் துறைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவரும், கவுள்பாளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச்செல்வன், அவரது சகோதரர் செ.முருகேசன் பெயரில் கல் குவாரி ஏலம் எடுப்பதற்காக விண்ணப்பிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்துக்கு முன்தினம் சென்றார்.
அப்போது அவருடன், பாஜக தொழில் துறை பிரிவு மாவட்டத் தலைவர் பி.முருகேசனும் வந்திருந்தார்.
அவர்களைப் பார்த்த அங்கிருந்த திமுகவினர், கல் குவாரி ஏலம் கேட்க விண்ணப்பிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். ஆனால், இதையும் மீறி விண்ணப்பத்தை பெட்டியில் போடச்சென்ற கலைச்செல்வன் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்த விண்ணப்பத்தை கிழித்து வீசியதுடன், அவர்களை சரமாரியாகத் தாக்கினர்.
அதுமட்டுமின்றி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
இந்த அராஜகத்தை தடுக்க முற்பட்ட டிஎஸ்பி பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், கலா உள்ளிட்ட போலீஸாரையும், புவியியல் சுரங்கத் துறை அலுவலகத்தில் இருந்த உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரி அனந்தன் ஆகியோரையும் திமுகவினர் தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
திமுகவினரால் சூறையாடப்பட்ட காட்சிகளை புகைப்படம், வீடியோ எடுத்த செய்தியாளர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களிடமிருந்த 3 செல்போன்களையும் திமுகவினர் பறித்து அராஜகம் செய்தனர்.
நேற்று மன்டே பெட்டிஷனில் கடமையாற்றிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அங்கு எழுந்த சத்தைக் கேட்டு அதிர்ந்து போனார்.
விரைந்து சென்ற கலெக்டர் கற்பகம் அங்கு கலவரம் செய்துக் கொண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்ததுடன், நிர்வாகக் காரணங்களுக்காக கல் குவாரி ஏலத்தை ரத்து செய்வதாக ஆட்சியர் அறிவித்தார்.
திமுகவினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த டிஎஸ்பி பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், கலா, எஸ்.ஐ. சண்முகம், பெண் காவலர் லட்சுமி,உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஅனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் பி.ஜெயபால் புகார் அளித்தன் பேரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் தொகுதி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் மகேந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளரான சிவசங்கர் மற்றும் ரமேஷ், செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்ளிட்டோர் மீது, கலவரம் செய்தல், கொடூர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்தல், கொலை மிரட்டல்,அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டபேரவையின் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக எம்எல்ஏவின் உதவியாளர் உள்ளிட்ட 300 பேர் நுழைந்து, கல் குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளிபெறக்கூடாது என்றும் மிரட்டியதாக தகவல்கள் வந்துள்ளன. திமுகவினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவரது உதவியாளர் தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வன்முறையைத் தடுக்க வந்த டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸாரை திமுகவினர் தாக்கியதாகவும், ஒப்பந்தப்புள்ளி வழங்க வந்தவர்களை அடித்துவிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். திமுகவினரின் வன்முறைச் செயல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறீயிருக்கிறார்.