போலிசுக்கு டிமிக்கி கொடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி குணா!

தாம்பரம் முரளிதரன்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 கொலைகள், 9 கொலை முயற்சிகள் 8 வழிப்பறி , 6 அச்சுறுத்தி மிரட்டுதல், 4 மணல் வழக்குகள்,உட்பட மொத்தம் 48 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் படப்பை குணா.
இரு முறை குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 43 வயது கொடுங்குற்றவாளி குணா (எ)ஸ் குணசேகரன் (எ) படப்பை குணா என்பவர் போலிசாரால் தேடப்பட்டு வந்தார்.
மேற்படி வழக்குகளில் நீதிமன்ற பிடி யானை நிறைவேற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சுதாகர்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பெரும்புதூர், அவர்களின் அறிவுரையின்படியும், காவல் ஆய்வாளர் சுங்குவார்சத்திரம் அவர்களுடன் இணைந்து தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி இன்று (25.01.22) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சுங்குவார்சத்திரம் காவல்நிலைய குற்ற எண் 786/21 ஹி/௳ 195கி,141,342,447,506(1),307, மிறிசி வழக்கில் சரணடைந்த அவரை தற்போது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடி படப்பை குணாவைப் பற்றி....
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (எ) படப்பை குணா.
ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன.
கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, சிறு-குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம்பறிப்பது போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மேற்படி பகுதி காவல் நிலையங்களில் புகார் உள்ளது.
மேலும் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி படப்பை குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்ததுகொண்டே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.
அப்படியிருக்க ரவுடி படப்பை குணா உள்ளிட்ட ரவுடிகளைப் பிடிக்க என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்டான ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படை சமீபத்தில் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே குணாவின் மனைவி எல்லம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில், அவரை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழகு விசாரணைக்கு வந்தபோது, குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணா இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து சரணடைந்த ரவுடி படப்பை குணாவை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க 17வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேலும், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பு:- மேற்படி படப்பை குணா அண்ட் கோவிற்கு பெரிய அளவில் இன்பார்மர்கள் உள்ளதாகவும், அவர்களை மடக்கினால் குணாவை பிடித்துவிடலாம் என வெள்ளைதுரை டீம் கருதி, அதன் பேரில் அலசிய போது, உளவாளிகள் காவல் துறையிலேயே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பேரில் அடையாளம் காணப்பட்ட கறுப்பாடுகள் 40 பேரை தென் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி சி.சைலேந்திர பாபு.
இந்த மாறுதலில் ஆறு இன்ஸ்பெகர்கள் உள்ளிட்டவர்கள் அடக்கம்.
இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ரவுடிகள் ஓட்டமெடுத்தனர்.
இந்நிலையில் தான் குணா சரண்டர் ஆகியுள்ளார்.