வேலூர் சிறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு!

வேலூர் சிறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு!

ஜி.கே.சேகரன்,

ஆயுள் கைதியை சொந்த வேலைக்காக பயன்படுத்தி தனிமையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்த வேலூர் வேலூர் சிறை டிஐஜி ராஜலட்சுமி என்பவர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

 இந்நிலையில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் சிபி.சி.ஐடி .கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் வந்தனர்.

       கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் வீட்டு வேலைகளை செய்ய அழைத்து சென்றுள்ளனர்.

  அப்போது அவரது வீட்டிலிருந்து 4.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டை கைதி சிவக்குமார் மீது சுமத்தி, சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாக அவரை தாக்கி சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

 இது குறித்து அறிந்த சிவக்குமாரின் தாய் கலாவதி உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில் எனது மகன் மீதான பொய் குற்றச்சாட்டு குறித்தும் தீர விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

  அதன் அடிப்படையில் வேலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் வேலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், அதற்கான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

 இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக சிறைத்துறை அலுவலர்கள் 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   அதேபோல் தவறிழைத்த சிறைத்துறை அலுவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றவழக்கு தொடர வேண்டும்.மேலும் சிறைவாசி சிவகுமாரை உடனடியாக சேலம் மத்திய சிறைக்கு இடம் மாற்ற வேண்டும்.சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும்.

  அத்துடன், சிறைவாசிகளின் அனைத்து உரிமைகள் உறுதி செய்யப்படுவதை நீதிமன்றம் இனி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

  நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார், சேலம் மத்திய சிறைக்கு  மாற்றப்பட்டார்.

  இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறைத்துறை அலுவலர்கள் உட்பட 14  பேர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  வேலூர் டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜியின் பி.எஸ்.ஓ ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  அந்த வகையில் 115(2) - பிறருக்கு காயம் ஏற்படுத்துதல்118(2) - ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல்.146 - சட்ட விரோதமாக கட்டாய வேலை வாங்குதல்.127 - சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இந்த நிலையில் நேற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்ட சிவக்குமாரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 அதனைத்தொடர்ந்து  சிபிசிஐடி எஸ்.பி.வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 குறிப்பு:- தமிழ்நாடு சிறைத்துறை கையேட்டின் 447வது விதியின் படி தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை டிஐஜி ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது