பா.ஜ.க. தமையிலுள்ள என்.டி.ஏ. கூட்டணியில் நிதிஷ்குமாரா! அப்படின்னா இண்டியா கூட்டணி?

ம.பா.கெஜராஜ்,
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தங்கள் மாநிலங்களில் மக்களவைத் தேர்தலை தனித்து எதிர்கொள்ளப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது இண்டியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் தன் பங்குக்கு நிதிஷ்குமாரும் கூட்டணியை குழப்பியிருக்கிறார்.
இது ஒரு பக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் ஒரே வாரத்தில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகிறார் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2020ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்து தான் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியில் அமரவைக்கப்பட்டார். இடையே ஏற்பட்ட மனக்கஷ்டம் காரணமாக மகாகத் பந்தன் கூட்டணி பக்கம் வந்தார். இந்த மகாகத் பந்தன் கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தான் இருக்கிறார் என்கிற நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் மீண்டும் அவர் முதலமைச்சர் ஆனார். ஆனால் அந்தக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் அணி மாறி என்.டி.ஏ. கூட்டணி துணையோடு முதலமைச்சர் நாற்காலியில் தொடர்ந்து அமர திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்நிலையில் பீகார் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை ராஷ்டிரிய ஜனதா தளம் புறக்கணித்த நிலையில், நிதீஷ் அதில் பந்தாவாக பங்கேற்றார்.
இதை பார்த்த மகாகத் பந்தன் கூட்டணி, அய்யோ... ரொம்ப குழப்பமா இருக்கே என்று முடியை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியோ இண்டியா, கூட்டணிக்கு என்ன நேருமோ என்று காங்கிரசும், அதன் ஆதரவு கட்சிகளும் கவலை கொண்டிருக்கிறார்கள்.