லஞ்ச ஒழிப்பு போலிசார்:-திருப்பத்தூர் - இராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிரடி சோதனை!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள ஒரு சிலர் மற்றும் அரசு அலுவலகங்கள் சிலவற்றின் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலிசார் குறிவைத்து நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகம் மீது லஞ்ச ஒழிப்பு அலுவலர்களின் பார்வை விழுந்தது.
ஆகவே அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய சோதன நடத்தி. கணக்கில் வராத ரூ 60 ஆயிரத்து 540 பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, சார் பதிவாளர் அலுவலகத்தில் இரவு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அப்பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் ஆய்வாளர் கௌரி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் உட்பகுதியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை யாரையும் வெளியே விடாமல் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.
மேலும் சார் பதிவாளர் அலுவகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய 2 மணி வரை 6 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 பறிமுதல் செய்துள்ளதாகவும், இது குறித்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றனர்.
இந்த சார்பதிவாளர் அலுவகத்தில் கடந்த சில மாதங்களாக போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாகவும்,ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:- இதே பகுதியில் காவல்துறையை சேர்ந்த ஒரு இளம் எஸ்.ஐ. மீது சிலர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்க முயன்ற போது அந்த தகவல் சம்மந்தப்பட்டவருக்கே தெரிந்துவிட்டதாம். ஆகவே பாதிக்கப்பட்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடன் நேரிடையாக புகார் அளிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
அரக்கோணம்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாக மாவட்ட டிஎஸ்பி கணேசனுக்கு தொடர்ந்து புகார் சென்றது. குறிப்பாக சார்பதிவாளர் அதிக அளவு லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உட்பட 7 பேர் கொண்ட போலீசார் திடீரென அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அடுத்த சில நிமிடங்களில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மெயின் கேட்டை பூட்டினர்.
மேலும் சார்பதிவாளர் அலுவலக நுழைவாயில் கதவையும் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். இதைக் கண்ட பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தவர்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள் , ஊழியர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்திருப்பது தெரிந்து கொண்டனர். பின்னர் சார் பதிவாளர் பயன்படுத்தும் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முழுவதுமாக சோதனை நடத்தி அதில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளே எடுத்துச் சென்றனர்.
அதன் பின்னர் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்களிடம் எவ்வளவு பணம் உள்ளது, எதற்காக வந்தீர்கள்? யாராவது லஞ்சம் கேட்கிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். இந்த சோதனை 5 மணி நேரமாக நடந்தது.
பின்னர் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்களை போலீசார் ஒவ்வொருவராக வெளியே அனுப்பினர்.தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் டிபன்பாக்ஸ், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 1,19,830 -ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் யாரிடம் எங்கிருந்து கைப்பற்றப்பட்டது என்ற விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர மறுத்தனர்.
5 மணி நேரமாக பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்களையும் உள்ளே வைத்து பூட்டியதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.