வாணியம்பாடி கிராமிய காவல் அதிகாரியின் ஒருதலைப்பட்சம்! பெண்கள் எஸ்.பி.அலுவலகத்தில் தர்ணா!
ஜி.கே.சேகரன்,
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு பீர் பாட்டில் குத்து! ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எஸ்.பி அலுவலகம் முன்பு அமர்ந்த 2 பெண்கள். எங்களை மனுஷராகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள் என ஆதங்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிகிறது.
ரஜினி குமார் டாஸ்மார்க் அருகே நின்று கொண்டு கடனை திருப்பி கேட்ட நிலையில், எதிர்தரப்புடன் இருந்த நபர்கள் எங்க அண்ணனிடமா காசு கேட்கிறாய் என்று பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பெண்கள் புகார் கொடுத்து மாத கணக்கில் ஆகுது சார். இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மனுஷராகவே மதிக்கவில்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் ஆதரவு இருப்பதாலேயே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்க என்ன செய்றது என்று தெரியவில்லை. ரஜினி குமாரை அடித்த 3 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறினர்.
பின்னர் அங்கு வந்த போலிசார் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தர்ணாவில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட நபரின் மனைவி ஹேமலதா, அவரின் தங்கை ஆகிய இரண்டு பெண்களை அவர்கள் சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஸ்டேஷனில் உள்ள முக்கிய அதிகாரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் தீவிர விசுவாசி. அது ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் நன்றாக தெரியும். இதனால் அவரை கார்னர் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த சந்தேக பார்வையிலிருந்து விலகி தன்னை உத்தமர் போல காட்டிக்கொள்ள இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அந்த காவல் அதிகாரி செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
இவரது ஒருதலை பச்சைமான நடவடிக்கையால் மாவட்ட காவல் நிர்வாகத்தினருக்கு தேவையற்ற தொல்லை ஏற்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் கூடஉரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே அந்த பெண்கள் எஸ்.பி.அலுவலகத்தில் அமர்ந்து போராடினர்.
இதே போல் தான் இவர் விசுவாசம் காட்டுவதற்காக செய்த வேளையால், 10.09.2021 ஆம் தேதியன்று வாணியம்பாடியில் பெரிய அசம்பாவிதமே நடந்தது. இதையறிந்த அப்போதைய சரக டிஐஜி இவரை வறுத்தெடுத்துவிட்டார். அப்படிப்பட்ட இந்த அதிகாரி அந்த காலக்கட்டத்தில் மாவட்ட அளவிளான பதவியில் இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.
இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்க முற்பட்ட போது அவர்கள் நமது அழைப்பை எடுக்கவில்லை. ஆகவே டிஎஸ்பி விஜயகுமார் அவர்களிடம் பேசினோம் அப்போது அவர் தெரிவித்ததாவது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். ஆகவே நாங்கள் முறையாகத்தான் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்.