தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி சாவு! பலருக்கு உடல் நலம் பாதிப்பு!

முருகன்,

 

 தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக செத்தார். பலருக்குஉடல் நல கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், பழைய பஸ் நிலையம் அருகே 7  ஸ்டார் அசைவ ஓட்டல் உள்ளது.

 

 இந்த ஓட்டலில் கடந்த 8ஆம் தேதி இரவு சாப்பிட்ட பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 அதில், ஆரணி அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரிசி ஆலை கூலித்தொழிலாளி ஆனந்த் (வயது 46) இவரது மனைவி பிரியதர்ஷினி (40)இவர் ஆரணி - இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

 

  இவரது மகள் லோஷினி( 10) என்ற மகளும் சரண் (14 )என்ற மகனும் உள்ளனர்.

 

  இவர்கள் 4 பேரும் கடந்த 8ஆம் தேதி இரவு மேற்படி 7 ஸ்டார்  ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டதால் உடல் உபாதை ஏற்பட்டு நேற்று முன்தினம் ஆரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

   அங்கு லோஷினி என்னும் சிறுமிக்கு அதிக உடல் நலம் பாதிக்கவே ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

   மேலும் திலகவதி, சந்தியா, பாஸ்கரன், டிஷ்ணு,யாகூப், சீனுவாசன், பாத்திமா இவர்கள் 7 பேரும் ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்  சேர்கப்பட்டனர்.

 

   மேலும் ஆரணி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன்,மகள் லோகேஷ், மோனிகா,சங்கர் என்பவரின் மகன் தமிழரசு,  கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் கார்த்திகா இவர்கள் நால்வரும் போளூர் வட்டத்தில் உள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

   மேலும் இதே போல் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுச் சென்று உள்ளதாக தெரியவருகிறது.

 

  சிறுமி லோஷினி  இறப்பு குறித்து ஆரணி தாசில்தார் சுபாஷ் சந்தர், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் , சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன்,  ரகு , கிருஷ்ணமூர்த்தி , மண்டல துணை தாசில்தார் தரணிகுமரன் வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் ஆகியோர் அரசு மருத்துவமனையில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 மேலும் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவு ஓட்டலில் மாதிரி உணவுகளை சேகரித்து விசாரணை நடத்தினார்.

 

  மேலும் ஆரணி நகர போலீசார் அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஹோட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷாவையும், சமையல் காரர்ரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்தனர்.

 

   இதனால், ஆரணி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.