அன்புமணி கைதும் விடுதலையும்! டயரில் தலைவைத்து தொண்டர்கள் ஆர்பாட்டம்!

உ.சசிக்குமார்,
நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது. அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது. மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது.
இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.
தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார். கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார். நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று.
விடமாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கார்த்திக், முத்து கிருஷ்ணன், செல்வமகேஷ், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், மாநில ஊடக பிரிவு நிர்வாக வினோபா, மாநில மகளிரணி செயலாளர் சிலம்பு செல்வி, மாநில விவசாய சங்க தலைவர் ஆலயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது. முற்றுகை போராட்டம் முடிந்த பின்னர் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை தொண்டர்கள் தாக்கினர். அதன் பின்னர் வேறு வாகனத்தில் அன்புமணி அழைத்து செல்லப்பட்டார்.
இதையடுத்து தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் ஆங்காங்கே கற்களாக காட்சி அளித்தது. அதேபோல் தண்ணீர் பாட்டில், கைகளில் வைத்திருந்த கொடிக்கம்பம் ஆகியவற்றை போலீசாரை நோக்கி வீசினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். தடியடியில் பா.ம.க. தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பா.ம.க. தொண்டர்களை கலைந்து செல்ல கூறினார்கள். ஆனால், அன்புமணி ராமதாசை வெளியே விட்டால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி அவரை அழைத்துச் சென்ற வேனின் டயர் கீழ் தலையை வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டனர்.