மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரும் பாவயாத்திரை! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் பா.ஜ.க.நடத்துவது பாத யாத்திரை இல்லை. குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்கும் மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவயாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக இளைஞரணியினர் மத்தியில் பேசினார்.
தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். வாய்ப்புகள் மறுக்கப்பட்டோரின் உரிமை மீட்க கிளர்ந்தெழுந்த திராவிட இயக்கத்தின் போராட்டங்களையும், அதன் புரட்சிகர வரலாற்றையும் படக்கதை மூலம் எளிமையாக கொண்டு சேர்த்திடும் வகையில், இளைஞர் அணி முன்னெடுப்பிலான
சார்பில் வெளிவந்துள்ள, 'திராவிடத்தால் வாழ்கிறோம்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்¢ அவர்கள் இன்று நடைபெற்ற மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்கள்.
கூட்டத்துக்காக வந்திருந்த இளைஞர் அணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் எனக்கு 70 வயது. ஆனால் நான் 20 வயது இளைஞர் போன்ற உணர்வில் நின்று கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்கும்போது புத்துணர்ச்சி பெறுகிறேன். உதயநிதிக்கு கிடைத்து இருக்கும் அமைச்சர் பதவி அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அவர் பாராளுமன்ற தேர்தலில் காட்டிய ஒற்றை செங்கலை எப்படி மறக்க முடியும்? இன்னும் அதை எண்ணி எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன. நீட் தேர்வு, அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் உள்பட அநீதிக்கு எதிராக உதயநிதி தீவிரமாக போராடினார். கட்சி பணி, ஆட்சிப்பணி இரண்டையும் சிறப்பாக செய்து நல்ல பெயரை வாங்கி தருகிறார்.
பிறந்த பயனை அடைந்து விட்டேன்
இளைஞர் அணியினர் உதயநிதி போல் பணியாற்ற வேண்டும். நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன். இல்லந்தோறும் இளைஞர் அணி என்ற தீர்மானத்தை பாராட்டுகிறேன். மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை தொடர்ந்து நடத்துங்கள். புதிதாக வருபவர்கள் திராவிட கொள்கைகளை புரிந்து வர வேண்டும்.
அடக்குமுறையை உடைத்து வந்திருக்கிறோம்
100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது. இன்றைக்கு எப்படி இருக்கிறது. அப்போது ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் படித்து இருந்தார்கள். இன்று எத்தனை பேர் படித்து இருக்கிறார்கள். எதுவும் தானாக மாறவில்லை. மாற்றியது யார்? படிக்க கூடாது. சாலைகளில் நடக்க கூடாது என்ற அடக்குமுறையில் இருந்து அதை உடைத்து வெளியே வந்திருக்கிறோம். இதற்கான அடித்தளத்தை போட்டு தந்தை பெரியார், அண்ணா, கலைஞர். இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
உழைப்பால் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன்
கலைஞர் மறைந்ததும் திராவிட கருத்தியல் மறைந்து விடும் என்று நினைத்தார்கள். அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்தது. கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை திராவிட மாடல் ஆட்சி அமைத்து கொடுத்துள்ளது. இந்த திராவிட மாடலை மக்களிடம் பரப்புங்கள். உங்கள் வளர்ச்சி பதவி வளர்ச்சியாக இருக்க கூடாது. கொள்கை வளர்ச்சியாக இருக்க வேண்டும். அண்ணா, கலைஞர் அமர்ந்த நாற்காலியில் நான் அமர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய உழைப்பால் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன்.
மன்னிப்பு கோரும் பாவ யாத்திரை.
இந்தியா கூட்டணி. இந்த பெயரை கேட்டாலே பிரதமருக்கு பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் தி.மு.க.வை பற்றித்தான் பேசுகிறார். இந்த ஆட்சி குடும்ப ஆட்சிதான். ஒன்றியத்தில் ஆள்வதால் வெல்ல முடியாத கட்சி போல் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அமித்ஷா நேற்று வந்தாரே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல. பாவ யாத்திரை. 2002-ல் குஜராத்தில் நடந்ததற்கும், இப்போது மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவயாத்திரை என்று பேசினார்.