7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அதிமுக!

ம.பா.கெஜராஜ்,
நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் அ.தி.மு.க., 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது.
இந்த செய்திக்குள் செல்வதற்கு முன் தேர்தலில் டெபாசிட் என்றால் என்னவென்று பார்ப்போம்.
பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தகுதியுள்ள நபர்கள் வேட்பு மனுவுடன் வைப்புத்தொகையையும் (டெபாசிட்) செலுத்த வேண்டும். அந்த வகையில் சட்டமன்றத்துக்கு ரூ.10,000/ம், அதே மக்களவை தேர்தலில் போட்டியிட ரூ.25,000/ம் என தேர்தல் அலுவலரிடம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் 50 சதவிகிதம் தான் செலுத்த வேண்டும்.
பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது 1/6 என்கிற கணக்கில் அதாவது வெற்றி பெறுபவர் பெறும் வாக்குகளில் ஆறில் ஒன்று என்கிற சதவிகிதத்தில் வாக்குகளை பெறுபவர்களுக்குத்தான் டெபாசிட் தொகை திருப்பி தரப்படும்.
சரி விஷயத்துக்கு வருவோம், அதிமுக தேமுதிக வுடன் வைத்த கூட்டணியை தவிர சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு எந்த கட்சியையும் உடன் சேர்த்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட சைலன்ட் மோடாகவே இருந்தது. அதற்கு பல்வேறு அழுத்தங்களே காரணம் என்று சொன்னாலும் கூட, தற்போது 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து அவமானப்படுவது என்னவோ அவர்கள் தான்.
ஆம், அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது.
மேலும், தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட 10 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க கூட்டணி 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
அதே போல் பாஜகவுக்கும் 10 தொகுதிகளில் டெபாசிட் காலி.
அந்த வகையில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் பால் கனகராஜ், சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, கரூர் வேட்பாளர் செந்தில்நாதன், நாகப்பட்டினம் வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், நாமக்கல் வேட்பாளர் ராமலிங்கம், தஞ்சாவூர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம், திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் அசுவதாமன் விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகிய 10 வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல் பா.ஜ.க. கூட்டணி சார்பில் களமிறங்கிய இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தூத்துக்குடியில் த.மா.கா. வேட்பாளர் விஜயசீலன், பா.ம.க. வேட்பாளர்கள் சேலம் அண்ணாதுரை, திண்டுக்கல் திலகபாமா, மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தேவதாஸ், சேலம் அண்ணாதுரை, காஞ்சீபுரம் ஜோதி வெங்கடேசன், விழுப்புரம் முரளிசங்கர் ஆகியோரின் ¢ டெபாசிட்டும் காலியானது.
மத்திய சென்னை பார்த்தசாரதி, திருவள்ளூரில் போட்டியிட்ட கு.நல்லதம்பி ஆகிய தே.மு.தி.க. வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்றாலும், தொகுதிகளில் டெபாசிட்டும் இழந்துள்ளனர்.