'சாமியாரின் காலடி மண்ணை எடுக்க முண்டியடித்ததாலேயே 122 பேர் பலி!

'சாமியாரின் காலடி மண்ணை எடுக்க முண்டியடித்ததாலேயே  122 பேர் பலி!

 நரேஷ்.என்.

  நமக்கு 'போலே பாபா' சாமியார் அருளாசி கொடுப்பார், கஷ்டமெல்லாம் நீங்கிவிடும் என்று நம்பி குடும்பம் குடும்பமாக ஒன்று கூடிய மக்களை, மரணம் ஆட்கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. இப்போது ஆம்புலன்ஸ்களும், ஆஸ்பத்திரிகளும் அவர்களை தம்பால் இழுத்துக் கொண்டன, ஊடகங்களும் தான்.

 உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில்  'போலே பாபா' என்கிற சாமியாரின் சொற்பொழிவு, ஜூலை 2 ஆம் தேதி நடந்தது. அப்போது மாலை கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 116 பேர் உயிரிழந்ததை மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் குமார்உறுதிப்படுத்தினார்.

 இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.

  அலிகார் மற்றும் எட்டாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 34-இல், சிக்கந்தராவ் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விபத்து நடந்தபிறகு அவை அவசர அவசரமாக அகற்றப்பட்டன.

 இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக நடந்து வந்தது. எட்டு நாட்களில் இதற்கான கூடாரம் கட்டி முடிக்கப்பட்டது.

 அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அரசு நிர்வாகத்திடம் கூறியிருந்தனர். ஆனால் அங்கு சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம்.

 'போலே பாபா' என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி கடந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டது. அவரை தரிசனம் செய்வதற்காகப் பல பெண்கள் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

வழிபாடு, சொற்பொழிவு முடிந்தபிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

 'போலே பாபா' தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் அங்கு நிற்காமல் சென்றுள்ளனர்.

 இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரிடம் இருந்தோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை.

நிகழ்ச்சி முடிந்தபிறகு, 'போலே பாபா' என அழைக்கப்படும் மத குருவின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.

 "பாபாவின் கால் பாத மண்ணை பக்தர்கள் ஆசீர்வாதமாகக் கருதி, பாபா செல்லும் இடமெல்லாம் மண்ணை எடுக்கின்றனர். செவ்வாய்க் கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, ஏராளமான பெண்கள் இந்த மண்ணை எடுக்கக் கீழே குனிந்தனர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டது. பலருக்கு எழுந்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை."

  இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது  சாமியார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று இன்னும் தெளிவாகவில்லை.