பிரதமர் உள்துறை அமைச்சர் நிதியமைச்சர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு யோசனை கூறியது ஏன்:-ராகுல்! வெளிநாட்டினருக்கே நஷ்டம் பியூஷ்கோயல்!!

நரேஷ்.என்,
நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "தேர்தல்களின் போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர். பங்குச் சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் மோடி பல முறை கூறினார்.
ஜூன் 4ம் தேதி பங்குச் சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே கூறினார்.
இதேபோல நிதியமைச்சரும் கூறினார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு யோசனை கூறியது ஏன்? முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா?" என்று கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க,வுக்கும், போலி கருத்துக் கணிப்பு வெளியிட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பிய ராகுல், "ஊடகங்கள் போலியான கருத்து கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200 முதல் 220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. இது கிரிமினல் குற்றமாகும்" என்று குற்றம்சாட்டினார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு 38 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் ஆட்சி அமைக்கும் முன்பே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக முதல் தாக்குதலைத் தொடர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் பியூஸ் கோயல்.
அவர் அளித்த பேட்டியில், "மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து ராகுல் காந்தி இன்னும் மீளவில்லை என்று நினைக்கிறேன். அவர் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த சதி செய்கிறார். இன்று, இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில், முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது. இன்று பங்குச் சந்தை மதிப்பு ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்த ஏப்ரல், மே மாதங்களில் வெளி நாட்டினர் பங்குகளை விற்பனை செய்தனர். இந்திய முதலீட்டாளர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி வாங்கினர். கருத்துக் கணிப்புகள் வெளியான அன்று வெளிநாட்டினர் அதிக விலைக்கு பங்குகளை வாங்க, இந்திய முதலீட்டாளர்கள் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டினர்.
தேர்தல் முடிவுகள் வந்த 4ஆம் தேதி பங்குச் சந்தை சரிவு அடைந்தபோது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறைந்த விலைக்கு பங்குகளை விற்றனர். மோடி அரசு வரப்போகிறது, அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கினர். வெளிநாட்டினர் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்திய முதலீட்டாளர்கள் அதிக விலைக்கு விற்று குறைந்த விலைக்கு வாங்கினார்கள். ஒரு வகையில், இந்திய முதலீட்டாளர்கள் இந்தக் காலத்திலும் சம்பாதித்தனர். யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை.
30 லட்சம் கோடி என்று ராகுல் காந்தி பேசுகிறார். ராகுல் காந்தியின் மீது மக்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் அது மதிப்பீடு என்பது கூட அவருக்குப் புரியவில்லை. மதிப்பீடு என்பது எதையும் குறிக்காது. வாங்குவதும் விற்பதும்தான் முக்கியம். 30 லட்சம் கோடியை இந்திய மக்கள் இழக்கவில்லை. மேலும் இதில் வெளிநாட்டினர் நஷ்டம் அடைந்தனர். இந்திய முதலீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.