நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்! அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஆவேச உரை!

நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்! அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஆவேச உரை!

ம.பா.கெஜராஜ்,

 நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம், சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாட்டைவிட்டு அகற்றுவேன் என டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

   அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்.

அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரையை நிகழ்த்த உள்ளார் ட்ரம்ப்.

   இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றனர்.

  அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.

  ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள் அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது

அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை ட்ரமப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவர் ஆற்றிய பேசியதாவது: "அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் அதிபர் பதவிக்குத் திரும்புகிறேன்.

  நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். 

அவை ஏராளமாக இருந்தாலும், அமெரிக்காவில் இப்போது உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும்.

இந்த நாளிலிருந்து, நமது நாடு மீண்டும் செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு தேசமும் நம்மைப் பார்த்து பொறாமைப்பட வைப்போம்.

   இனி நம்மை யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். எனது நிர்வாகத்தின் ஒவ்வொரு நாளிலும், நான் அமெரிக்காவை முதன்மையாகக் கருதுவேன்.

நமது இறையாண்மை மீட்டெடுக்கப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல்கள் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும்.

  மேலும் பெருமைமிக்க, வளமான மற்றும் சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணத்திலிருந்து, அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது.

  பல ஆண்டுகளாக, ஒரு மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பு நமது குடிமக்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வத்தையும் பறித்துள்ளது. நமது சமூகத்தின் தூண்கள் உடைந்து முற்றிலும் சிதைந்துவிட்டன.

  உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட நிர்வகிக்க முடியாத ஒரு அரசாங்கம் இப்போது நம்மிடம் உள்ளது. அது நமது அற்புதமான, சட்டத்தை மதிக்கும் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, ஆனால் சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களிலிருந்து வரும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

  அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை வழங்கிய நிலையில் சொந்த மக்களைப் பாதுகாக்க யவறிவிட்டது.

  எங்கள் போராட்டத்தைத் தடுக்க விரும்புபவர்கள் என் சுதந்திரத்தைப் பறிக்க முயன்றிருக்கிறார்கள், உண்மையில், என் உயிரையும் பறிக்க முயன்றிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில், ஒரு கொலையாளியின் தோட்டா என் காதில் பாய்ந்தது. ஆனால் அப்போது நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் அதிகமாக நம்புகிறேன், என் உயிர் ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டுள்ளது.

  அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற கடவுளால் நான் காப்பாற்றப்பட்டேன்"  சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைபவர்கள் தடுக்கப்படுவார்கள். குறிப்பாக மெக்சி கோவில் இருந்து சட்ட விரோதமாக உள்ளே நுழைய விடாமல் தடுக்க தெற்கு பகுதியில் படைகளை அனுப்புவேன், சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை அகற்றுவதே என் முதல் வேலை என்று ட்ரம்ப் ஆவேசமாக பேசினார்.