ஈரான் நாட்டு அதிபர் மரணத்துக்கு நாங்கள் காரணம் இல்லை:- இஸ்ரேலை கண்டு அலறும் சுத்துபட்டு நாடுகள்!

ம.பா.கெஜராஜ்,
ஈரான் நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அற்கு நாங்கள் காரணம் இல்லை என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஈரான் - அசர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணை திறப்பு விழா அசர்பைஜானின் கோமர்லு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் உள்ளிட்டோர் பங்கேற்று அணை மதகுகளை திறந்துவைத்தனர்.
விழாவை முடித்துக் கொண்டு, ஈரான் அதிபர் ரெய்சி உள்ளிட்டோர் கோமர்லு நகரில் இருந்து ஈரானின் டேப்ரிஸ் நகருக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் திரும்பினர்.
டேப்ரிஸ் நகரில் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், ஈரான் அதிபர் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறை உடனான தொடார்பு துண்டிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மாயமானது.
ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. துருக்கி, அசர்பைஜான், அர்மீனியா, இராக், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை ஈரான் அரசு நாடியது.
ரஷ்யாவில் இருந்து 2 சிறப்பு ஹெலிகாப்டர்களில் 50 மீட்புப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரானின் ஐஆர்ஜிசி படை வீரர்கள் தரைமார்க்கமாக மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
அப்படியிருக்க மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பதை துருக்கியின் ட்ரோன் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடித்தது. ஈரானின் ஐஆர்ஜிசி படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிபர் உள்ளிட்ட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக், மத போதகர் அயதுல்லா முகமது அலி அல்-ஹாசிம், அதிபரின் பாதுகாப்பு படை தலைவர் சர்தார் சையது மெஹதி மவுசாவி,விமானிகள் கர்னல் சையது தாஹிர், கர்னல் மோசின், விமான தொழில்நுட்ப நிபுணர் மேஜர் பெஹ்ருஸ் காதிமி, ஐஆர்ஜிசி படை மூத்த அதிகாரி அன்சர் அல்-மாதி ஆகிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இஸ்ரேலை கண்டு அலறும் சுத்துபட்டு நாடுகள்.
இஸ்ரேல் நாடு கடல்கடந்து சில முக்கிய சம்பவங்களை கடந்த காலங்களில் அரங்கேற்றியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றது ஆகும். இந்நிலையில் ரெய்சியின் மரணத்தை மையப்படுத்தி சுத்துப்பட்டு நாடுகள் இஸ்ரேலை கண்டு மேலும் அச்சமடைந்துள்ளார்கள்.
இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அணு உலைகளுக்கு அருகே அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, "ஈரானுக்கும் எங்களுக்கும் மோதல் இருப்பது உண்மைதான். ஆனால், ஹெலிகாப்டர் விபத்துக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை'' என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளன. ஈரான் நாட்டின் நிலவரத்தை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சேகரித்திருக்கும் தகவலின் அடிப்படையில் தற்போது அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் கூறினார். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு இரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.
வாகன அணியின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக சென்றடைந்துள்ள நிலையில் ரைசியின் ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது எப்படி? என்று சில இரானியர்கள் சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இறந்த ரெய்சியைப் பற்றி சில நினைவுகள்.
இப்ராஹிம் ரைசிக்கு வயது 63.
ரைசி 1960 ஆம் ஆண்டு வடகிழக்கு இரானில் உள்ள புனித நகரமான மஷாத்தில் பிறந்தார்.
இந்த நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் மிகவும் புனிதமாகக் கருதும் மசூதியும் உள்ளது. சிறுவயதிலேயே உயர்ந்த நிலையை அவர் அடைந்தார்.
ரைசியின் தந்தை ஒரு மௌல்வி. ரைசிக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை காலமாகிவிட்டார். அவர் ஒரு சமய அறிஞரும் வழக்கறிஞரும் ஆவார்.
தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் தனது 15 வயதில் கோம் நகரில் அமைந்துள்ள ஷியா கல்வி நிறுவனத்தில் படிக்கத் தொடங்கினார்.
தனது 20 வது வயதில் ரைசி, தெஹ்ரானுக்கு அருகில் உள்ள கராஜ் நகரின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
ரைசி 1989 மற்றும் 1994 க்கு இடையில் தெஹ்ரானின் வக்கீல் ஜெனரலாக இருந்தார். பின்னர் 2004 முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
கடைசி நிகழ்வின்போது எடுத்த படம்
2014 ஆம் ஆண்டு இரானின் அரசு வழக்கறிஞர் ஆனார். இரானிய நீதித்துறையின் தலைவராக இருந்த ரைசியின் அரசியல் கருத்துகள் 'அதிக அடிப்படைவாத சிந்தனைகள் நிறைந்ததாக' கருதப்படுகின்றன.
2021 ஜூன் மாதம் தாராளவாத ஹசன் ரூஹானிக்கு பதிலாக இரான் இஸ்லாமிய குடியரசின் அதிபராக ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 ஜூன் மாதம் இரான் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வான போது உள்நாட்டில் பல சவால்களை எதிர்கொண்டார்.
ஷியா மதத் தலைவர்களின் வரிசையில் ரைசி, மதத் தலைவர் ஆயத்துல்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்தார்.
கடந்த 1980 முதல் 1988 வரை நடந்த ஈரான் - இராக் போரின்போது ஈரானை சேர்ந்த இடதுசாரி குழுவான முஜாகிதீன்-இ-கல்க் என்ற அமைப்பு ஈரான் ராணுவத்துக்கு எதிராக போரிட்டது. அவர்களுக்கு அப்போதைய இராக் அதிபர் சதாம் உசேன் ஆயுத உதவி வழங்கினார். போரின் முடிவில், முஜாகிதீன் இ-கல்க் அமைப்பை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர்களை பிடித்து சிறை வைத்தனர்.
அப்போது ஈரான் நீதித் துறையின் உயர் அதிகாரியாக பதவி வகித்த சையது இப்ராஹிம் ரெய்சி தலைமையிலான ஆணையம், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியது. நீதித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ரெய்சி, கடந்த 2019-ல் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2021-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க,ரெய்சி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கடந்த ஆண்டில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில், பொதுமக்களில் 551 பேரும், பாதுகாப்பு படை வீரர்களில் 75 பேரும் உயிரிழந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதிபர் உயிரிழந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என அஞ்சப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.