பயணிகள் தலை மீது விழும் பேருந்து கூரை!

கு.அசோக்,
அரக்கோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் பேருந்துக்கும் புதிய பேருந்து நிலையத்தையே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பேருந்து நிலையத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் திடீரென 6 அடி அகலத்திற்கு இடிந்து கீழே விழுந்தது.
அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகளை வாரி அகற்றினர்.
அதுமட்டுமின்றி பேருந்து நிலையத்தில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.